

புதுடெல்லி:
பாராளுமன்ற மாநிலங்களவையில், நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் இளமாறம் கரீம், ஒரு பிரச்சினையை எழுப்பினார். அவர் பேசுகையில், “கொரோனா வைரஸ் பீதியால் கல்வி நிறுவனங்களும், இதர இடங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் தங்கள் பயண திட்டத்தை மாற்ற வேண்டிய நிலையில் ரெயில், விமான டிக்கெட்டுகளை ரத்து செய்கிறார்கள். அதற்கு கட்டணம் பிடிப்பதை கைவிடுமாறு ரெயில்வேக்கும், விமான நிறுவனங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட வேண்டும்” என்று கூறினார்.
அவரது கருத்தை பல்வேறு எம்.பி.க்கள் ஆதரித்தனர். சபைத்தலைவர் வெங்கையா நாயுடு, “இது பரிசீலிக்கத்தக்க யோசனை” என்று தெரிவித்தார்.
அ.தி.மு.க. உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், பாராளுமன்ற கூட்டத்தொடரை முன்கூட்டியே முடித்துக் கொள்ளலாம் என்று கூறினார். ஏ.டி.எம்.களை ஏராளமான மக்கள் பயன்படுத்துவதால், ஏ.டி.எம்.கள் மீது கிருமி நாசினி தெளிக்க உத்தரவிட வேண்டும் என்று பிஜு ஜனதாதளம் எம்.பி. சஸ்மிட் பத்ரா கேட்டுக்கொண்டார்.