

சென்னை:
திருச்சி சிவா எம்.பி.யின் மகன் சூர்யா, நஜீர் அகமது என்பரிடம் கடந்த செப்டம்பர் மாதம் ஐந்து லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. மூன்று மாதத்தில் கடனை திருப்பி கொடுத்து விடுவதாக கூறிய அவர், வங்கிக் காசோலையை வழங்கியுள்ளார். ஆனால் வங்கிக்கணக்கில் பணம் இல்லாததால் காசோலை திரும்ப வந்துவிட்டது.
இதுகுறித்த நஜீர் அகமது திருச்சி சிவாவிடமும் அவரது மகன் சூர்யாவிடமும் பலமுறை கேட்டும் பணத்தை கொடுக்காமல் அலைக்கழித்து வந்ததாக கூறி நஜீர் அகமது சமயபுரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
அதனடிப்படையில் இந்த வழக்கு திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் சூர்யா நேரில் ஆஜராகாமல் இருந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், இந்த காசோலை மோசடி விவகாரத்தில் வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாததால் சூர்யாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து திருச்சி ஜே.எம்-3 நீதிமன்றம் உத்தரவுவிட்டுள்ளது.