

தர்மபுரி:
தர்மபுரி பி.அக்ரகாரத்தை அடுத்த சி.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜவேல் (வயது 59). கோழி வியாபாரி. கேரளாவில் கோழி வியாபாரம் செய்து வந்த இவர் கடந்த வாரம் சொந்த ஊருக்கு திரும்பினார்.
நேற்று காலை 11 மணி அளவில் காய்ச்சல், சளி, தும்மல் காரணமாக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். என்றாலும் அவருக்கு காய்ச்சல் குணமாகவில்லை. இதைத் தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு மருத்துவமனையில் உள்ள கொரோனா தனி வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
அவருடைய ரத்த மாதிரியை எடுத்து சேலத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பலாமா? அல்லது அவரை சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பலாமா? என்பது குறித்து மருத்துவ குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதுகுறித்து டாக்டர் ஒருவர் கூறும்போது, கோழி வியாபாரி காய்ச்சலுக்காகவே சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இன்னும் கொரோனா அறிகுறி இருப்பது உறுதி செய்யப்படவில்லை. ரத்த மாதிரியை எடுத்து பரிசோதனை செய்த பிறகு தான் மற்ற விபரங்கள் தெரியவரும் என்றார்.