வங்கிகள் 4 மணி நேரம் மட்டுமே செயல்படும்- நகைக்கடன், வீட்டுக்கடன் வழங்குவது நிறுத்தம்

கொரோனா தாக்கத்தால் வங்கிகள் பல்வேறு புதிய விதிமுறைகளை பின்பற்றும்படி இந்திய வங்கிகள் சங்கம் பரிந்துரைத்துள்ளது. அதன்படி வங்கிகள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி:

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

தேவையற்ற பயணங்களை தவிர்க்கும்படியும், அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே செல்ல வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

பல மாநிலங்களில் மக்கள் சுய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள புனே உள்ளிட்ட சில இடங்களில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் கடைகள், வணிக வளாகங்கள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பால் வர்த்தகம் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது.

இந்நிலையில் கொரோனா தாக்கத்தால் வங்கிகள் பல்வேறு புதிய விதிமுறைகளை பின்பற்றும்படி இந்திய வங்கிகள் சங்கம் பரிந்துரைத்துள்ளது. அதன்படி வங்கிகள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும்.

சில வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

பணம் எடுத்தல், பணம் கட்டுதல், காசோலை, அரசு தொடர்பான பணிகள் மற்ற வங்கிகளுக்கு பணம் கொடுத்தல் பணிகள் மட்டுமே நடைபெறும்.

புதிதாக நகைக்கடன் வழங்குவது, புதிய வீட்டுக்கடன் உள்ளிட்ட கடன் வழங்கும் பணிகள் இனி நடைபெறாது. இத்தகைய விதிமுறைகள் இன்று முதல் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

சில வங்கிகள் இந்த நேரத்தை அமல்படுத்த ஒரு சில நாட்கள் எடுத்துக்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக எல்.ஐ.சி. காப்பீட்டுதாரர்கள் தங்கள் பிரீமியம் தொகையை செலுத்த ஏப்ரல் 15-ந்தேதி வரை கால அவகாசம் அளிப்பதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆனாலும் இப்போது நடப்பில் உள்ள காப்பீடுகளுக்கு மட்டுமே பொருந்தும். காலாவதியான பாலிசிகளுக்கு இந்த சலுகை பொருந்தாது எனவும், ஏப்ரல் 15-ந்தேதி வரை இணையதளம் மூலமும் காப்பீட்டு பிரீமியத்தை செலுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com