

ராயபுரம்:
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இங்குள்ள 400 படுக்கைகளிலும் நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். அவர்களுக்கு 200 டாக்டர்கள், 200 நர்சுகள் சிகிச்சையளித்து வருகிறார்கள்.
சுமார் 300 மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள், சுகாதார பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் 8 டாக்டர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோல் மேலும் சில டாக்டர்களின் ரத்த பரிசோதனை முடிவு வர வேண்டியுள்ளது. ஏற்கனவே பரிசோதனை மையங்கள், ரத்த மாதிரி சேகரிக்கும் இடங்களில் பணியாற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்களுக்கு தரம் குறைந்த பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக ஸ்டான்லி மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர் ஒருவர் கூறும்போது, ‘கொரோனா பாதிப்பு சில டாக்டர்களுக்கு ஏற்பட்டு உள்ளது. சில மருத்துவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
மற்றவர்கள் மருத்துவ விடுப்பில் செல்லும்படி கூறப்பட்டு இருக்கிறது. பாதுகாப்புடன் பணியாற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்’ என்றார்.