

சங்ககிரி:
சென்னை அம்பத்தூரில் இருந்து சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியை சேர்ந்த 24 வயது கர்ப்பிணி கடந்த 1-ந்தேதி சங்ககிரிக்கு வந்து கொண்டிருந்தார். சேலம் மாவட்டம் ஓமலூர் வந்தபோது அவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரியவந்தது.
பின்னர் அவர் சங்ககிரியில் உள்ள தனது வீட்டுக்கு வந்தார். இதை அறிந்த வடுகம்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் அந்த பெண் வீட்டுக்கு சென்று பரிசோதனை செய்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் கர்ப்பிணி சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். அப்போது அவரை பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருடைய தந்தை, தங்கை, பாட்டி ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.