கொரோனா பலி எண்ணிக்கை 15 ஆயிரத்தை எட்டியது- 10 ஆயிரம் பேர் கவலைக்கிடம்

சீனாவில் உருவாகி உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 15 ஆயிரத்தை எட்டியுள்ளது. 10 ஆயிரம் பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

பிஜிங்:

சீனாவில் உருவாகி உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.

192 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ள கொரோனா வைரசுக்கு நேற்று ஒரே நாளில் 1,634 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 14,687ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. உலகம் முழுவதும் 3 லட்சத்து 38 ஆயிரத்து 724 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தினமும் பலியானவர்களின் எண்ணிக்கை 13 சதவீதம் அதிகரித்து வருகிறது.

தற்போது இத்தாலியில் கொரோனா கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் சீனாவை விட இத்தாலியில் பலி எண்ணிக்கை கூடி விட்டது. அங்கு நேற்று ஒரே நாளில் 651 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 5 ஆயிரத்து 576ஆக உயர்ந்தது.

மேலும் புதிதாக 5 ஆயிரத்து 560 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59 ஆயிரத்து 138ஆக அதிகரித்துள்ளது.

இத்தாலியில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனாலும் தினமும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் தேசிய சுகாதார கவுன்சில் தலைவர் பிராங்கோ லோகடெல் கூறும்போது, “கடந்த 15-ந் தேதி முதல் இரண்டு வாரங்களுக்கு அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் ஏற்பட்ட முதல் விளைவுகளை பார்க்க எதிர்நோக்கி உள்ளோம். இந்த சூழ்நிலையில் வரும் வாரங்கள் மிக முக்கிய மானதாகும். இறுதியாக வைரசின் அறிகுறிகள் தலைகீழாக மாறும் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார்.

சீனாவில் வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது. அங்கு நேற்று 9 பேர் மட்டுமே உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்து 270 ஆக உயர்ந்தது. மேலும் புதிதாக 39 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 81 ஆயிரத்து 93 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் நேற்று கொரோனாவுக்கு மேலும் 33 பேர் பலியானார்கள்.

இதனால் சாவு எண்ணிக்கை 452ஆக உயர்ந்தது. மேலும் புதிதாக 1,171 பேர் பாதிக்கப்பட்டனர். மொத்தம் 34 ஆயிரத்து 717 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஸ்பெயினில் பலி எண்ணிக்கை 1,772ஆக உயர்ந்தது. அங்கு நேற்று 391 பேர் உயிரிழந்தனர். புதிதாக 3,272 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மொத்தம் 28 ஆயிரத்து 768 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஈரானில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,685ஆக உயர்ந்துள்ளது. நேற்று 129 பேர் பலியானார்கள். மொத்தம் 21 ஆயிரத்து 638 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பிரான்சில் நேற்று 112 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 674 ஆக உயர்ந்தது. 16 ஆயிரத்து 18 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இங்கிலாந்தில் மேலும் 48 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 281 ஆக உயர்ந்துள்ளது. அங்கு இதுவரை 5 ஆயிரத்து 688 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தென் கொரியாவில் 111 பேரும், நெதர்லாந்தில் 179 பேரும், ஜெர்மனியில் 94 பேரும், பெல்ஜியத்தில் 75 பேரும், சுவீடனில் 21 பேரும், கனடாவில் 20 பேரும், துருக்கியில் 30 பேரும், ஜப்பானில் 41 பேரும், இந்தோனேசியாவில் 48 பேரும் உள்பட பல்வேறு நாடுகளில் பலி எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது.

உலகம் முழுவதும் மொத்தம் 10 ஆயிரத்து 553 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com