சாமிநாதனுக்கு அரசியல் நாகரீகம் இல்லை- காங்கிரஸ் கண்டனம்

எம்.எல்.ஏ.க்கள் பற்றி அவதூறு பேசும் சாமிநாதனுக்கு அரசியல் நாகரீகம் தெரிய வில்லை என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் கலியபெருமாள் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சாமிநாதனுக்கு அரசியல் நாகரீகம் இல்லை- காங்கிரஸ் கண்டனம்
Published on

புதுச்சேரி:

முத்தியால்பேட்டை வட்டார காங்கிரஸ் முன்னாள் தலைவர் கலிய பெருமாள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அரசியல் வாழ்வில் தடம் பதித்தவர்கள் சாதாரண தொண்டனாக இருந்து பல்வேறு மக்கள் போராட்டங்கள், கட்சி பணிகள் ஆற்றி படிப் படியாக உயர்ந்து உயர் பதவிகள் பெற்று அதில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ளனர்.

இவ்வாறு அரசியல் பணிக்கு வருபவர்கள் நெளிவு சுளிவுகளை கற்று எந்த சூழ்நிலையிலும் நாகரீகத்துடன் நடந்து கொள்வார்கள்.

முதற்கட்ட தலைவர்கள் இருக்கும்போது கொல்லைப்புறமாக பா.ஜ.க.வின் தலைவர் பதவியை பிடித்த சாமிநாதன் தனது அநாகரீக பேச்சால் அரசியலுக்கு தகுதி பெறாதவர் என்பதை வெளிக்காட்டி உள்ளார்.

சாமிநாதன் அரசியலில் கட்சி தலைவர் பதவியை மட்டுமல்லாது, நியமன எம்.எல்.ஏ. பொறுப்பையும் கொல்லைப்புறமாக பெற்று வந்ததால்தான் சட்டசபைக்குள் அவரால் அடியெடுத்து வைக்க இன்றளவும் இயலவில்லை.

சாமிநாதனின் பேச்சால் அவர் இன்னும் அரசியலில் பாலர் பருவத்தை தாண்ட வில்லை என்பதை ஒப்புக் கொள்கிறார்.

எதையாவது பேச வேண்டும், எப்படி வேண்டு மானாலும் பேசலாம் என்றால் சாமிநாதன், திரைப்படத்துக்கு கதை எழுதி கதாசிரியர் ஆகலாமே தவிர, அரசியலில் நுழைவது சரியாக இருக்காது. அதுவும் தியாக பின்னணியில் உள்ள காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களை அவதூறாக பேசுவது கண்டனத்துக்குரியது.

முதல்-அமைச்சரும், எங்கள் கட்சியின் ஆணி வேருமாகிய நாராயணசாமி, கட்சி, தொகுதி, ஜாதி பேதம் பாராமல் புதுவையில் உள்ள ஒட்டு மொத்த மக்களுக்காகவும் போராடி திட்டங்களை செயல்படுத்தி வருவதை சற்று கூர்ந்து கவனித்தாவது சாமிநாதன் தன்னை மாற்றிக்கொள்ள முன்வர வேண்டும். சாமிநாதன் பகிரங்க மன்னிப்பு கேட்டு தனது தவறை சரி செய்ய முன்வர வேண்டும்.

இவ்வாறு கலியபெருமாள் கூறியுள்ளார். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com