குஜராத்தில் உள்ள கர்நாடக கவர்னர் வீட்டின் முன் காங்கிரசார் தர்ணா

கர்நாடகாவில் பெரும்பான்மை இல்லாத பாஜகவை ஆட்சியமைக்க அழைத்ததை கண்டித்து, குஜராத்தில் உள்ள கவர்னர் வஜுபாய் வாலாவின் வீட்டின் முன் காங்கிரசார் தர்ணாவில் ஈடுபட்டனர். #Vajubhaivala #Congress #Protest
குஜராத்தில் உள்ள கர்நாடக கவர்னர் வீட்டின் முன் காங்கிரசார் தர்ணா
Published on

அகமதாபாத்: 

கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜ.க.வுக்கு தனி பெரும்பான்மை இல்லாத நிலையில் அக்கட்சியை ஆட்சியமைக்க கவர்னர் வஜுபாய் வாலா அழைப்பு விடுத்தார். அத்துடன் எடியூரப்பாவுக்கு முதல் மந்திரியாக பதவிப் பிரமாணமும் செய்து வைத்தார். இன்னும் 15 நாட்களுக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். 

கர்நாடகத்தில் ஆட்சியமைக்க 112 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியை கவர்னர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கவில்லை. எனவே, கவர்னரை கண்டித்து காங்கிரசார் நாடு முழுவதும் இன்று பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கர்நாடகாவில் பெரும்பான்மை இல்லாத பாஜகவை ஆட்சியமைக்க அழைத்ததை கண்டித்து, குஜராத்தில் உள்ள கவர்னர் வஜுபாய் வாலாவின் வீட்டின் முன் காங்கிரசார் தர்ணா நடத்தினர்.

ராஜ்கோட்டின் நியூட்டன் நகர் சொசைட்டியில் உள்ள வஜுபாய் வாலா வீட்டின் முன்பு காங்கிரசார் திரண்டு தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கவர்னருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

இதுதொடர்பாக குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் மகேஷ் ராஜ்புத் கூறுகையில், கவர்னர் வஜுபாய் வாலாவின் நடவடிக்கை ஜனநாயகத்தின் மீது படிந்துள்ள கறை போல் உள்ளது. மாநிலத்தை நிர்வகிக்கும் கவர்னர் பாஜக தொண்டர் போல் செயல்பட்டு வருகிறார் என குற்றம் சாட்டினார்.

இதேபோல். குஜராத்தில் அகமதாபாத் மற்றும் வதோதராவிலும் காங்கிரசார் தர்ணாவில் ஈடுபட்டனர். #Vajubhaivala #Congress #Protest

X

Maalai Malar
www.maalaimalar.com