கள்ளக்குறிச்சியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை கலெக்டர் ஆய்வு

கள்ளக்குறிச்சியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் கலெக்டர் கிரண்குராலா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி கடைவீதியில் ஆய்வு செய்த கலெக்டர் கிரண்குராலா
கள்ளக்குறிச்சி கடைவீதியில் ஆய்வு செய்த கலெக்டர் கிரண்குராலா
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று முன்தினம் வரை 437 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கள்ளக்குறிச்சி நகரத்தில் மட்டும் 69 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வசித்து வந்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அங்கு கொரோனா தடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளான கடை வீதி, சேலம் மெயின் ரோடு உள்ளிட்ட இடங்களில் கலெக்டர் கிரண்குராலா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் அங்கிருந்த அதிகாரிகளிடம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் எத்தனை பேர் உள்ளனர். அவர்களின் எத்தனை பேருக்கு சளி, காய்ச்சல் உள்ளது என்பது குறித்த விவரங்களை கேட்டறிந்தார். மேலும் சளி, காய்ச்சல் உள்ளவர்களுக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இந்த ஆய்வின்போது சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் சங்கீதா, நகராட்சி பொறியாளர் பாரதி, வட்டார மருத்துவ அலுவலர் பங்கஜம், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மகாலிங்கம் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com