

புதுச்சேரி:
புதுச்சேரி செட்டி தெருவில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகத்தில் கிரெடிட் கார்டு வழங்கும் திட்ட தொடக்கவிழா நேற்று நடந்தது. இதை முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
எல்.ஐ.சி. மத்திய அரசுக்கு வருமானம் ஈட்டுகின்ற நிறுவனம். இதனை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. தனியார் காப்பீட்டு நிறுவனங்களை தொடங்குவார்கள். பின்னர் அதை மூடிவிடுவார்கள். ஆனால் எல்.ஐ.சி. நிலையானது.
கிரெடிட் கார்டு திட்டத்தை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். புதுவையில் உள்ள அனைத்து வங்கிகளிலும் மொத்தமாக சுமார் ரூ.50 ஆயிரம் கோடி புழக்கத்தில் உள்ளது. புற்றுநோய், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு பலர் முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் நிதி கேட்கின்றனர். ஆனால் அதிகமாக நிதி கொடுக்க முடியவில்லை.
புதுவை மாநில மக்கள் அனைவரையும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்கு மத்திய அரசு நிதி தராவிட்டாலும் மாநில அரசு செயல்படுத்தும்.
நிதிக்காக மத்திய அரசிடம் தொடர்ந்து போராடி வருகிறோம். படிப்படியாக வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. புதுவையில் வளர்ச்சியை கொண்டுவருவதற்கான வாய்ப்பு நிறைய உள்ளது.
நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது மக்கள் நிம்மதியாக வாழ நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முடிவெடுத்தோம். அதேபோல் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகிறோம். கடந்த காலங்களில் இருந்ததைப்போல் ரவுடிகள் அட்டகாசம் இப்போது இல்லை. அவ்வப்போது நடக்கும் ரவுடிகளின் அட்டகாசத்தையும் ஒடுக்க கூறியுள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.