

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர்கள் குழுவை தமிழக அரசு அமைத்து உள்ளது. இக்குழுவின் பரிந்துரையின் பேரில் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இந்த மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் தொடர்ந்து ஆலோசனை நடத்தி, நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தற்போது நடைமுறையில் உள்ள 4ம் கட்ட ஊரடங்கு நாளை நிறைவடைய உள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்நிலையில், மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மீண்டும் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சை மற்றும் நெறிமுறைகள் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது.
ஊரடங்கை நீட்டிப்பதா அல்லது தளர்த்துவதா? என்பது குறித்தும் முடிவு செய்யப்படுகிறது. ஆலோசனை நிறைவடைந்த பிறகு முக்கிய தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.