

சேலம்:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சேலத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜி.எஸ்.டி. விரி விதித்தால் மக்களுக்கு பாதிப்பு இல்லை என்று மத்திய அரசு கூறி வருகிறது. ஆனால் சாராயத்துக்கு வரி விதிக்கவில்லை. மின்சாரத்துக்கும் வரி விதிக்கவில்லை. ஆனால் சாதாரண மக்கள் பயன்படுத்தும் மெழுகுவர்த்தி மற்றும் ஊது பத்திக்கு வரி விதித்து விட்டனர். இதனால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
விமான கட்டணத்துக்கு ஒரு சதவீதம் மட்டுமே வரி விதித்து உள்ளனர். ஜி.எஸ்.டி. வரி விதிப்பு கார்பரேட் நிறுவனங்களுக்கும், பெரிய தொழில் நிறுவனங்களுக்கும் சாதகமாக உள்ளது.
சிலிண்டர் விலை 32 ரூபாய் அதிகரித்து உள்ளது. இதேபோல ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலையும் அதிகரித்து உள்ளது. இது பற்றி மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனிடம் கேட்டபோது ஓட்டலில் சாப்பிடாதீர்கள். வீட்டில் சமைத்து சாப்பிடுங்கள் என்று பதில் சொல்கிறார். இது முரண்பாடாக உள்ளது.
உலகில் உள்ள பல நாடுகள் கல்வி, சுகாதாரத்தை இலவசமாக வழங்குகின்றன.
அதே போல ஜி.எஸ்.டி. வரிவிதித்துள்ள மத்திய அரசும் கல்வி, சுகாதாரத்தை இலவசமாக அதுவும் தரமாக வழங்குமா?
மக்கள் ஆற்றலை திரட்டி பொருளாதாரத்தை மேம்படுத்தி நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு வரவேண்டும். இப்படி வரி விதிப்பதால் நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டுவர முடியாது.
சினிமா டிக்கெட்டுக்கு மத்திய அரசு 28 சதவீத வரி விதித்துள்ளது. இதை 5 சதவீதமாக குறைக்க வேண்டும். மாநில அரசு 30 சதவீத கேளிக்கை வரியை விதித்துள்ளது. அதை குறைக்க வாய்ப்பில்லை என்றாலும் சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்தக்கூடாது. அப்படி உயர்த்தினால் திருட்டு சி.டி.க்களின் புழக்கம் அதிகரித்து விடும்.
மக்கள் தியேட்டர் பக்கம் செல்ல மாட்டார்கள். நடிகர்கள் சம்பளத்தை குறைக்கலாம். அதை டைரக்டரும், தயாரிப்பாளரும் பேசி முடிவெடுக்க வேண்டும்.
ஆந்திராவில் நதிகளை இணைத்து வருகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் கூடுதல் மதுக்கடைகளை திறந்து வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.