

லடாக் எல்லை கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா - சீனா வீரர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதில் 20-க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
இந்த மோதல் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் பா.ஜனதா தலைவர்கள் அரசியல் தொடர்பான குற்றச்சாட்டுக்களை காங்கிரஸ் மீது வைத்துள்ளனர்.
இன்று மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற பேரணியில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பா.ஜனதா தலைவர் நட்டா கலந்து கொண்டு பேசியதாவது:-
கடந்த 2017-ம் ஆண்டில் டோக்லாமில் இந்தியா - சீனா படைகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. அப்போது, டெலியில், இந்தியாவிற்கான சீன தூதரை, ராகுல் காந்தி ரகசியமாக சந்தித்தார். தற்போது, கல்வானில் நடந்த மோதலின் போது நாட்டை காங்கிரஸ் தவறாக வழிநடத்துகிறது.
கடந்த 2005-06-ம் ஆண்டில் சீனா மற்றும் சீன தூதரகம் ராஜிவ் காந்தி அறக்கட்டளைக்கு 3 லட்சம் அமெரிக்க டாலர் நிதி வழங்கியுள்ளதை கண்டு வியப்படைந்தேன். இதுதான் காங்கிரஸ் மற்றும் சீனா இடையே ரகசிய ஒப்பந்தம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் ‘‘ராஜிவ் காந்தி அறக்கட்டளைக்கு பெற்ற பணத்தை பொது நன்கொடையாளர்கள் பட்டியலில் சேர்த்துள்ளது. சீனாவிடம் இருந்து காங்கிரஸ் தலைமையிலான அரசு லஞ்சமாக பெற்றார்களா?.
அந்த நன்கொடை எடுத்துக்கொண்டு, சீனாவுனடன் இலவச வர்த்தக ஒப்பந்தத்திற்கு பரிந்து செய்தது. அது சீனர்களுக்கு ஆதரவாக அமைந்தது என்பது உண்மையில்லையா?’’ என்று குற்றம்சாட்டியுள்ளார்.
ராஜிவ் காந்தி அறக்கட்டளையின் தலைவராக சோனியா காந்தியும், அதில் உறுப்பினராக மன்மோகன் சிங், ராகுல், காந்தி, ப. சிதம்பர், பிரியங்கா காந்தி ஆகியோர் இருந்தனர்.