கொரோனா வைரஸ் விவகாரத்தில் அமெரிக்கா வழக்கு போட்டது அபத்தம் - சீனா கருத்து

கொரோனா வைரஸ் விவகாரத்தில் உண்மையை மறைத்ததாக அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டிருருப்பது அபத்தமானது என சீனா கூறி உள்ளது
சீனா செய்தி தொடர்பாளர் ஜெங் சுவாங்
சீனா செய்தி தொடர்பாளர் ஜெங் சுவாங்
Published on

பீஜிங்:

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று நோய், உலகமெங்கும் பெருத்த பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் நோய் பற்றிய உண்மைத் தகவல்களை வெளியிடாமல் மறைத்தும், எச்சரிக்கை விடுத்தவர்களை கைது செய்தும், தொற்றுநோய் என்பதை முதலில் மறுத்தும், உலகளவில் ஈடு செய்ய முடியாத அளவுக்கு பாதிப்புகளை சீனா ஏற்படுத்தி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இதையொட்டி அமெரிக்க கோர்ட்டில் மிசவுரி மாகாணத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஏற்பட்டுள்ள இழப்புகளுக்கு சீனாவை பொறுப்பேற்க வைக்க வேண்டும் என்று வழக்கில் கூறப்பட்டுள்ளது.

இதுபற்றி சீனா பதில் தெரிவித்துள்ளது. அந்த நாட்டின் செய்தி தொடர்பாளர் ஜெங் சுவாங் இதுபற்றி பீஜிங்கில் நேற்று கருத்து தெரிவிக்கையில், “இந்த குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது. இது சட்டத்தின் அடிப்படையில் இல்லாத வழக்கு. அபத்தமானது. சீன அரசு இதில் வெளிப்படையாக, பொறுப்புணர்வுடன் செயல்படுகிறது. அமெரிக்காவுக்கும், உலக நாடுகளுக்கும், உலக சுகாதார நிறுவனத்துக்கும் பொதுவான தகவல்களை தெரிவித்தது” என கூறினார்.

மேலும், இந்த தொற்று நோய் விவகாரத்தில், அமெரிக்க நீதிமன்ற அதிகார எல்லைக்குள் சீன அரசு வராது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com