ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் - கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு

கோவையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு அளித்துள்ளனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

கோவை:

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமையில் விவசாயிகள் கருப்பு துணியால் தலையில் முக்காடு அணிந்து வந்து மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற சுற்று சூழல் அமைச்சகத்தின் அனுமதி தேவையில்லை என்று அறிவித்துள்ளது. மேலும் மாநில அரசிடமும், மக்களிடமும் கருத்துகள் கேட்காமலே அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களின் கருத்துகளை கேட்காமல் தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது என மத்திய சுற்று சூழல் மந்திரி பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதியுள்ளார். மக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இந்த திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பாரதிய ஜனதா வக்கீல்கள் பிரிவு மாவட்ட தலைவர் நந்தகுமார் தலைமையில் பொறுப்பாளர் மோகன் மற்றும் வக்கீல்கள் மனு அளித்தனர். அதில் கூறி இருப்பதாவது-

1998-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோவையில் பல இடங்களில் குண்டு வெடிப்பு நடந்தது. இதில் பலர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர். இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் பா. ஜனதா சார்பில் ஆர்.எஸ்.புரம் பகுதியில் குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அந்நாட்டு சார்பில் அரசு நினைவிடம் அமைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்படுகிறது. அதே போல் கோவையிலும் குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் நினைவாக அரசே சொந்த செலவில் நினைவு தூண் அமைத்து தருவதோடு, இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை அரசே ஏற்று நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பாப்பநாயக்கன் பாளையம் புதூர் கிளை செயலாளர் சந்திரன் மாவட்ட வருவாய் அலுவலரிடம் கொடுத்த மனுவில் கூறி இருப்பதாவது-

தமிழக அரசு இந்த ஆண்டு 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொது தேர்வு முறையை நடை முறைபடுத்திய காரணத்தால் மாணவர்கள் ஆன்லைனின் விண்ணப்பம் செய்து சாதி சான்றிதழை பெற தற்சமயம் நடை முறை பின்பற்றப்பட்டு வருகிறது.இந்த முறையில் விண்ணப்பிக்க பெற்றோரின் குறிப்பாக தந்தையின் கல்வி சான்றிதழ் அல்லது சாதி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அரசு பள்ளியிலும் குழந்தைகளின் பெற்றோர்கள் ஏறத்தாழ கல்வி அறிவு இல்லாதவர்களாக, சாதி சான்றிதழ் இல்லாதவர்களாக இருக்கும் நிலையில் விண்ணப்பிக்க முடியாமல் மிகவும் அவதிப்படுகிறார்கள்.

எனவே அரசு பள்ளியில் படிக்கும் ஏழை குழந்தைகளின் நிலைமையை கருத்தில் கொண்டு பள்ளிகளிலே சாதி சான்றிதழ் வழங்கும் நடைமுறையினை குறைந்த பட்சம் அரசு பள்ளிகளுக்காவது செயல்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com