சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் 9 போலீசாருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
பென்னிக்ஸ்-ஜெயராஜ்
பென்னிக்ஸ்-ஜெயராஜ்
Published on

மதுரை:

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டனர். பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் 2 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இதுகுறித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில், விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10 போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர். மேலும், அந்த 10 போலீசாரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பின்னர் இந்த வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கில் கைதான போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை கொரோனாவால் இறந்ததால், மற்ற 9 பேர் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.

வழக்கு விசாரணை தொடர்பாக சாத்தான்குளம் மற்றும் கோவில்பட்டியில் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். 

ஜெயராஜ் மற்றும் பென்னிக்சின் குடும்பத்தினர், நண்பர்கள், கோவில்பட்டி சிறைச்சாலை அதிகாரிகள் உள்பட பல தரப்பினரிடம் விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில், இந்த கொலைவழக்கில் சிபிஐ இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. 2 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 9 போலீசாருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com