மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை நிறுத்தியதை எதிர்த்து வழக்கு - மத்திய-மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்

எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை நிறுத்தியதை எதிர்த்து வழக்கு தொடர்பாக் மத்திய-மாநில அரசுகள் 2 வாரத்துக்குள் பதிலளிக்குமாறு ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
சென்னை ஐகோர்ட்டு
சென்னை ஐகோர்ட்டு
Published on

சென்னை:

தென்காசியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சுப்பையா, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களின் உயர்கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மத்திய அரசின் உதவியுடன் மாநில அரசு, கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை கடந்த 2012-ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.

ஆனால் 2018-19-ம் கல்வி ஆண்டில் இருந்து அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு மட்டுமே இந்த உதவித்தொகை வழங்க வேண்டும் என்றும், தனியார் சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கக்கூடாது என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது இந்த திட்டத்தின் நோக்கத்துக்கே எதிரானது மட்டுமின்றி, சட்டவிரோதமானதும் ஆகும்.

எனவே இந்த உத்தரவுகளை ரத்துசெய்து தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் விசாரித்தனர். பின்னர் இந்த வழக்கிற்கு மத்திய-மாநில அரசுகள் 2 வாரத்துக்குள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com