

முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான தேக்கடி ஆனைவாசல் பகுதியில் வாகன நிறுத்தம் கட்டும் பணியில் கேரள அரசு ஈடுபட்டது. அந்த இடம் தமிழக அரசுக்கு சொந்தமானது என, சென்னையில் உள்ள தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கை விசாரித்த தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் சமீபத்தில் தமிழகத்திற்கு எதிராக தீர்ப்பு வழங்கியது. கேரளா அரசு வாகன நிறுத்தம் அமைக்க தடையில்லை என கூறிய நீதிபதிகள், தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தனர்.
இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தென் மண்டல பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. வாகன நிறுத்தம் போன்ற நிரந்தரமான கட்டுமான பணிகள் மேற்கொள்ளவும் இடைக்கால தடை விதிக்கப்பட்டது. அதன்பின்னர் இந்த வழக்கு தொடர்பாக கேரள அரசு பதில் மனு தாக்கல் செய்தது.