

அகமதாபாத்:
சமீபத்தில் நடந்து முடிந்த குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க 99 இடங்களில் வென்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. தற்போதைய முதல்வர் விஜய் ரூபானி இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல்வரை தேர்வு செய்ய அருண் ஜெட்லி மேலிட பார்வையாளராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் அகமதாபாத்தில் அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடந்தது. அதில், சட்டமன்ற கட்சி தலைவராக விஜய் ரூபானி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், துணை தலைவராக நிதின் படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் அவர் துணை முதல்வராக பதவியேற்கவுள்ளார்,
தற்போது ராஜ்கோட் மேற்கு தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள விஜய் ரூபானி, கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அம்மாநில முதல்வராக பொறுப்பேற்றார்.
முந்தைய அமைச்சரவையில் இருந்த பல மந்திரிகள் அப்படியே தொடர்வார்கள் என்றும், புதிய எம்.எல்.ஏக்களுக்கு மந்திரி சபையில் வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது.
இந்நிலையில், முதல் மந்திரி விஜய் ரூபானி தலைமையிலான புதிய மந்திரிசபை வரும் 26-ம் தேதி பதவியேற்கிறது. காந்திநகர் சச்சிவாலயா திடலில் காலை 11 மணியளவில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, பா.ஜ.க தலைவர் அமித் ஷா மற்றும் இதர மாநிலங்களை சேர்ந்த பா.ஜ.க. முதல் மந்திரிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.