

உளவு பார்த்த குற்றச்சாட்டில் இந்திய கடற்படையில் பணியாற்றிய அதிகாரி குல்புஷன் ஜாதவ் பாகிஸ்தான் சி்றையில் தண்டனை அனுபவித்து வருகிறார். கடந்த 25-ம் தேதி ஜாதவின் மனைவி மற்றும் தாயார் இஸ்லாமாபாத் சென்று சிறையில் உள்ள அவரை சந்தித்து பேசினர்.
அப்போது, ஜாதவ் மனைவி மற்றும் தாயாரின் தாலிகளை கழற்றியும், நெற்றியில் உள்ள குங்குமத்தை அழிக்கவும் அதிகாரிகள் வற்புறுத்தியுள்ளனர். மேலும், ஜாதவின் மனைவி அணிந்திருந்த ஷுக்களில் உலோகப்பொருட்கள் இருந்ததாகவும், அதனால் அதனை திருப்பி தரவில்லை என்றும் கூறப்படுகிறது. எனினும், இது உண்மையா என்று தெரியவில்லை. இவ்விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், பாகிஸ்தானின் செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக டெல்லியில் உள்ள அந்நாட்டு தூதருக்கு ஒரு ஜோடி செருப்புகளை டெல்லி பா.ஜ.க செய்தி தொடர்பாளராக இருக்கும் தஜிந்தர் பாக்கா ஆர்டர் செய்துள்ளார். அமேசான் இணைய தளத்தில் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் முகவரியை குறிப்பிட்டு செருப்பு ஆர்டர் செய்துள்ள ரசீதை தனது ட்விட்டர் பக்கத்திலும் பாக்கா வெளியிட்டுள்ளார்.