பா.ஜ.க.வில் சேர காங். பெண் எம்.எல்.ஏ.விடம் ரூ.30 கோடி பேரம் - கர்நாடக அரசை கவிழ்க்க சதி நடப்பதாக புகார்

கர்நாடகாவில் காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சியை கவிழ்ப்பதற்காக பாரதிய ஜனதா கட்சி என்னிடம் ரூ.30 கோடி பேரம் பேசியதாக காங்கிரஸ் எம்.எல்.எ. தெரிவித்துள்ளார். #CongressMLA #LaxmiHebbalkar
பா.ஜ.க.வில் சேர காங். பெண் எம்.எல்.ஏ.விடம் ரூ.30 கோடி பேரம் - கர்நாடக அரசை கவிழ்க்க சதி நடப்பதாக புகார்
Published on

பெங்களூர்:

கர்நாடகாவில் காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. மதசார் பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர் குமாரசாமி முதல்- அமைச்சராக உள்ளார்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் பதவி கேட்டு 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கினர். இதனால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.

பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதாவுக்கு இழுக்க முயற்சி செய்வதாக முதல்வர் குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில் காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ., தன்னிடம் பா.ஜனதாவினர் ரூ.30 கோடி பேரம் பேசினர் என்று கூறி உள்ளார்.

இதுதொடர்பாக கர்நாடக மாநில காங்கிரஸ் மகளிர் அணி தலைவியும், எம்.எல்.ஏ.வுமான லட்சுமி ஹெப்பான்சர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சில நாட்களுக்கு முன்பு பா.ஜனதா மூத்த தலைவர் ஒருவர் என்னிடம் போனில் பேசினார். அப்போது காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசை கவிழ்க்க வேண்டும். நான் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்தால் ரூ.30 கோடி பணமும், அமைச்சர் பதவியும் தருவதாக தெரிவித்தார். அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டேன்.

பா.ஜனதா தலைவர் பேசிய போன் அழைப்பை பதிவு செய்து காங்கிரஸ் மேலிடத்துக்கு அனுப்பினேன். என்னிடம் நடத்திய பேரம் குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளேன்.

பா.ஜனதாவின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி காங்கிரசை விட்டு விலக மாட்டேன். ஆட்சியை கவிழ்க்க நடக்கும் சதியை வெளிக்கொண்டு வரவே பேரம் பேசிய விவரத்தை வெளியில் தெரிவிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். #BJP #CongressMLA #LaxmiHebbalkar

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com