

சிம்லா:
68 தொகுதிகளை கொண்ட இமாச்சல பிரதேச சட்டசபைக்கு கடந்த மாதம் 9-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 75.28 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன. 42 மையங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பா.ஜ.க பெருவாரியான தொகுதிகளில் முன்னிலை பெற்றது. ஆளும் காங்கிரஸ் கட்சியானது பின்னடவை சந்தித்தது. ஆட்சியமைக்க 35 இடங்கள் தேவைப்படும் நிலையில், பா.ஜ.க சுமார் 42 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
ஆளும் காங்கிரஸ் கட்சி 22 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. இதனால், அங்கு பா.ஜ.க ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது. ஆனால், அக்கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிரேம் குமார் துமல் சுஜான்பூர் தொகுதியில் தோல்வியடைந்துள்ளார்.
காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ராஜேந்தர் ராணாவை விட அவர் 2933 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். இதனால், அக்கட்சி புதிய முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்யும் நிலைக்கு ஆளாகியுள்ளது. துமல் முதல்வராக பதவியேற்று பின்னர் இடைத்தேர்தல் மூலம் சட்டசபைக்கு வர வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.