

புதுடெல்லி:
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக பீகார் மாநில ஆளுநராக உள்ள ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற பா.ஜ.க. ஆட்சி மன்ற குழு கூட்டத்திற்கு பிறகு அக்கட்சியின் தலைவர் அமித்ஷா இதனை அறிவித்தார்.
கட்சியில் நீண்ட காலம் பணிபுரிந்துள்ளவர் என்று பல்வேறு காரணங்களை பா.ஜ.க. கூறினாலும், தலித் வேட்பாளர் என்ற ஆயுதத்தையை அது கையில் எடுத்துள்ளதை காட்டுகிறது. எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக முயற்சிகள் மேற்கொண்டு வந்த நிலையில், அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் ஒரு வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் பா.ஜ.க. தலித் வேட்பாளர் ஒருவரை அறிவித்துள்ளது.
பா.ஜ.க. ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்துள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது நிலைப்பாட்டினை தெரிவித்து வருகின்றனர்.
முதல்கட்டமாக, தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சிகள் பா.ஜ.க. வேட்பாளருக்கு தங்களது ஆதரவை உங்களது தெரிவித்துள்ளன. அதேபோல், தங்கள் மாநில ஆளுநரை வேட்பாளராக அறிவித்துள்ளதற்கு மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தலித் வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். பா.ஜ.க. தலித் வேட்பாளரை அறிவித்துள்ள போதும் அதனை அவர் ஏற்கவில்லை. அரசியல் சாயம் இல்லாத தலித் வேட்பாளரை காங்கிரஸ் கூட்டணி அறிவித்தால் பரிசீலிப்போம் என்று மாயாவதி தெரிவித்துள்ளார்.
அதேபோல், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜியும் பா.ஜ.க. அறிவித்துள்ள வேட்பாளரை ஏற்கவில்லை. நாட்டில் எத்தனையோ முக்கியமான தலித் தலைவர்கள் இருக்கிறார்கள். ஆனால் ராம்நாத் கோவிந்த் பா.ஜ.க.வில் உள்ள ஒரு தலித் தலைவர் அவ்வளவு தான் என்று மம்தா கூறினார்.
ஜூன் 22-ம் தேதி நடைபெறவுள்ள எதிர்க்கட்சி கூட்டத்திற்கு பிறகு தனது நிலைப்பாட்டினை தெரிவிக்க உள்ளதாக மம்தா தெரிவித்து விட்டார்.