

புதுச்சேரி:
புதுவை மாநில பா.ஜனதா பொதுச்செயலாளர் தங்க.விக்ரமன் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவை யூனியன் பிரதேச சட்டத்தின்படி மத்திய அரசு 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமிக்க முடியும். அந்த சட்டத்தின்படிதான் மத்திய உள்துறை அமைச்சகம் சாமிநாதன், செல்கணபதி, சங்கர் ஆகிய 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்துள்ளது. இதற்கான உத்தரவை தலைமை செயலாளர் நியமன எம்.எல்.ஏ.க்களிடம் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து எம்.எல்.ஏ.க்களின் நியமனம் அரசின் சிறப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது. இதன்அடிப்படையில்தான் தங்களுக்கு இருக்கை, அலுவலகம் ஒதுக்கும்படி சபாநாயகர் வைத்திலிங்கத்திடமும், சட்டமன்ற செயலாளரிடமும் 3 எம்.எல்.ஏ.க்கள் கடிதம் அளித்தனர்.
இந்த கடிதத்திற்கு சபாநாயகர் நேரடியாக பதில் அளித்திருக்கலாம். ஆனால் அதைவிடுத்து மக்களை குழப்பும் வகையில் பத்திரிகைகளுக்கு ஒரு தகவலை வெளியிட்டுள்ளனர். நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமிக்கப்பட்டதை புதுவை அரசிதழில் வெளியிட்டது அரசுதானே? அதை சபாநாயகர் ஏற்க மறுக்கிறார். அப்படியென்றால் அரசிதழை மாநில அரசு வெளியிடவில்லையா?
இன்னும் 15 நாட்களுக்குள் சபாநாயகரும், புதுவை காங்கிரஸ் அரசும் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சட்டமன்றத்தில் இருக்கை ஒதுக்கித்தர வேண்டும். அப்படி ஒதுக்கித்தராதபட்சத்தில் ஒதுக்காதவர்களின் இருக்கை இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன், துணை தலைவர் செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.