நேபாளம், இலங்கையில் பாஜகவை விரிவுபடுத்த அமித் ஷா திட்டம்... வைரலாகும் திரிபுரா முதல்வரின் கருத்து

பாஜக நிகழ்ச்சியில் திரிபுரா முதல்வர் பிப்லப் தேவ் கூறிய கருத்து வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
திரிபுரா முதல்வர்
திரிபுரா முதல்வர்
Published on

கவுகாத்தி:

திரிபுரா முதல்வர் பிப்லப் தேவ் சமீபத்தில் அகர்தலாவில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, நிர்வாகிகளை உற்சாகப்படுத்தும் வகையில் பேசிய அவர், கட்சியை நாடு முழுவதும் விரிவுபடுத்துவது மட்டுமல்லாமல், அண்டை நாடுகளிலும் விரிவுபடுத்தும் திட்டம் உள்ளது என்றார். அவர் பேசியதாவது:-

ஒருமுறை கட்சிப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினோம். அப்போது, பாஜகவின் வடக்கு மண்டல செயலாளர் அஜய் ஜாம்வால் பேசும்போது, பல மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைத்திருப்பதாக கூறினார். அதற்கு பதிலளித்த அமித் ஷா, இப்போது இலங்கையும் நேபாளமும் எஞ்சியுள்ளதாக கூறினார். நேபாளம் மற்றும் இலங்கையில் கட்சியை விரிவுபடுத்தி, அங்கு அரசாங்கத்தை அமைப்பதற்கு அங்கு வெற்றி பெறவேண்டும் என்று கூறினார். 

அமித் ஷாவின் தலைமையில் பாஜக உலகின் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. கேரளாவில் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் மேலாக இடதுசாரிகளும் காங்கிரசும் மாறி மாறி ஆட்சியமைக்கும் போக்கை பாஜக மாற்றும். அங்கும் பாஜக வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பிப்லப் தேவ் கூறிய இந்த கருத்து நகைச்சுவைக்காக சொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனினும், சர்வதேச அரசியல் தொடர்பாக அவர் கூறிய கருத்து வைரலாகி வருவதுடன், சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com