

சீனாவில் தோன்றி மிகக்கொடிய உயிர்க்கொல்லி நோயாக உருவெடுத்துள்ள கொரோனா வைரஸ் தாக்கம் உலகின் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளை திக்குமுக்காட வைத்துள்ளது.
இந்த நோய்த்தொற்றினால் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்கவுள்ளது.
கொரோனா வைரஸ் நோய் தொற்று தங்கள் நாட்டில் மேலும் பரவாத வகையில் வெளிநாடுகளில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு வருபவர்களை 14 நாட்கள் (தன்னிச்சையாக) தனிமைப்படுத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை நேற்று (சனிக்கிழமை) நள்ளிரவில் பிறப்பித்த ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன், ‘நமது வாழ்க்கை முறைகளில் சில மாற்றங்களுக்கு நாம் பழகிக் கொள்ள வேண்டியுள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.