

புதிய வருமான உச்ச வரம்பின் தாக்கமும், பலனும் பற்றி ராயப்பேட்டையை சேர்ந்த ஆடிட்டர் ஜான்மோரிஸ் கூறியதாவது:-
ஆடிட்டர் ஜான்மோரிஸ்
நிகர வருமானம் ரூ.5 லட்சம் வரை உள்ளவர்களுக்கு முழுமையாக வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் நிகர வருமானம் ரூ.5 லட்சத்தை தாண்டும்போது 13 ஆயிரம் ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும்.
ரூ.10 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் சரியான முறையில் சேமிப்பு செய்யும்போது ஒரு வரியும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. இதனால் மாத வருமானம் ரூ.80 ஆயிரம் வரை வருமானம் உள்ளவர்கள் வருமான வரி செலுத்தாமல் இருக்க முடியும்.
ஒருவருடைய மாத சம்பளம் ரூ.80 ஆயிரம் என்றால் வருட வருமானம் ரூ.9 லட்சத்து 60 ஆயிரம்.
இதுதவிர 80டி பிரிவின் கீழ் 25 ஆயிரம் ரூபாய்க்கான மெடிக்கல் இன்சுரன்ஸ், 60 வயதை தாண்டிய பெற்றோருக்கான மருத்துவ செலவு ரூ.25 ஆயிரம் ஆகியவை வரிக்கழிவு பெறும். இதன்மூலம் வருமானம் ரூ.5 லட்சமாக கணக்கிட்டால் வரி செலுத்த வேண்டியதில்லை.
நிகர வருமானம் ரூ.5 லட்சத்து 100 ஆக உயர்ந்தாலும் வரி ரூ.13 ஆயிரம் செலுத்த வேண்டும். இந்த பட்ஜெட்டின் மூலம் சலுகை என்பது முறையாக திட்டமிட்டு செலவினங்களை கணக்கிட்டால் மட்டுமே கிடைக்கும்.
முக்கியமாக ரூ.2.5 லட்சத்துக்கு மேல் வருமானம் வருபவர்கள் வருமான வரி ரிட்டன் கண்டிப்பாக தாக்கல் செய்ய வேண்டும். அல்லது அபராதத்துடன் கணக்கு தாக்கல் செய்ய வேண்டியது வரும்.