

மதுரை:
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அ.வல்லாளப்பட்டியைச் சேர்ந்தவர் அசோகன் (வயது50). அ.ம.மு.க. பிரமுகரான இவர் நேற்று அதிகாலை 5 மணி அளவில் தனது உறவினர் கார்த்திகைச்சாமி என்பவருடன் அழகர்கோவில் ரோட்டில் நடைபயிற்சி சென்றார்.
செட்டியார்பட்டி மதனம் பாறை என்ற இடத்தில் சென்றபோது 4 மோட்டார் சைக்கிள்களில் 8 பேர் பயங்கர ஆயுதங்களுடன் வந்தனர். அந்த கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. ரத்த வெள்ளத்தில் மிதந்த அசோகன் சம்பவ இடத்தி லேயே இறந்தார்.
தகவல் அறிந்த மேலூர் டி.எஸ்.பி. சுபாஷ் மற்றும் மேலவளவு போலீசார் சம்பவ இடம் வந்தனர். அவர்கள் அசோகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலையாளிகளை தேடி வந்தனர்.
கொலையாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவி வந்தது.
இந்த நிலையில் அசோகன் படுகொலை தொடர்பாக அ.தி.மு.க. பிரமுகர்கள் உமாபதி, முருகேசன், பிரகாஷ்ராஜ், செல்வம், பன்னீர்செல்வம் ஆகிய 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதத்தில் அசோகன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அ.ம.மு.க. பிரமுகர் கொலையில் அ.தி.மு.க. பிரமுகர்களிடம் விசாரணை நடத்தப்படுவதால் மேலூர் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.