பெங்களூருவில் இருந்து விமானத்தில் மதுரை வந்தவருக்கு கொரோனா பாதிப்பு

பெங்களூருவில் இருந்து மதுரைக்கு விமானத்தில் வந்த பயணிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மதுரை விமான நிலையம்
மதுரை விமான நிலையம்
Published on

இந்தியாவில் 2 மாதங்களுக்கு பிறகு கடந்த திங்கட்கிழமை முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கி உள்ளது. விமான பயணிகள், அவர்கள் சென்றடையும் பகுதியில் உள்ள தனிமைப்படுத்தும் மையத்தில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் கொரோனா உறதி செய்யப்பட்டால், உடனடியாக மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்படுகின்றனர்.

அவ்வகையில் பெங்களூருவில் இருந்து நேற்று இண்டிகோ விமானத்தில் மதுரை வந்த ஒரு பயணிக்கு கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

நோய் அறிகுறி எதுவும் இல்லாமல் அந்த நபர் பெங்களூரில் இருந்து மதுரை வந்ததாகவும், வந்த பின்னர் பரிசோதனை செய்தபோதுதான் நோய்  அறிகுறி தென்பட்டதாகவும் இண்டிகோ கூறி உள்ளது.

விமானத்தில் உள்ள மற்ற பயணிகளைப் போலவே இந்த பயணியும் முக கவசம் மற்றும் கையுறைகள் அணிவது உள்ளிட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றியதாக இண்டிகோ தெரிவித்துள்ளது.

இதேபோல் திங்களன்று அகமதாபாத்தில் இருந்து ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் டெல்லி வழியாக கவுகாத்திக்கு பயணித்த இரண்டு பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்திருந்தது. திங்கட்கிழமை மாலை இண்டிகோ விமானம் மூலம் சென்னையில் இருந்து கோவை சென்ற ஒரு பயணிக்கும் கொரோனா பாதிப்பு இருந்துள்ளது.

மேலும், டெல்லியில் இருந்து அலையன்ஸ் ஏர் விமானத்தில் லூதியானா சென்ற ஒரு பயணிக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com