

புதுச்சேரி:
தமிழக இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதற்கு புதுவை அ.தி.மு.க.வினர் கொண்டாடினர். உப்பளம் தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், வையாபுரி மணிகண்டன், பாஸ்கர் மற்றும் நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
இதனைத்தொடர்ந்து அ.தி.மு.க. சட்டமன்ற குழு தலைவர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மீண்டும் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமையும் என்பதை நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் உறுதி செய்துள்ளது.
தி.மு.க.- காங்கிரஸ் கட்சிகளை தமிழக மக்கள் புறக்கணித்துள்ளனர். வரும் பொதுத்தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும்.
புதுவை காமராஜர் நகர் தொகுதியில் ரூ.30 கோடிவரை செலவிட்டு காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் வெற்றி பெற்றுள்ளார். ஆளுங்கட்சி அராஜகம் மூலம் வெற்றி பெற்றுள்ளனர். இதனை எதிர்த்து நீதிமன்றத்தை நாடுவோம்.
இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.