தேர்தலுக்காக அதிமுக அரசு ரூ.2 ஆயிரத்தை அறிவித்து உள்ளது- நடிகர் மன்சூர்அலிகான் பேட்டி

வறுமைகோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது தேர்தலுக்காக என்று நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்காக அதிமுக அரசு ரூ.2 ஆயிரத்தை அறிவித்து உள்ளது- நடிகர் மன்சூர்அலிகான் பேட்டி
Published on

பழனி:

நடிகர் மன்சூர் அலிகான் பழனி வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாட்டில் நடைபெறுவது ஜனநாயக ஆட்சி அல்ல, ராணுவ ஆட்சி. மக்களின் குறைந்தபட்ச உரிமைகள் கூட மறுக்கப்படுகிறது. வறுமைகோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது மக்களுக்கான உதவி அல்ல. வருகிற தேர்தலில் ஓட்டுக்கான பணம். கொடநாடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மீது கொலைக்குற்றச்சாட்டு உள்ளது.

அம்பானி, அதானிக்கு கடன் தள்ளுபடி செய்கிறார்கள், ஆனால் விவசாயக்கடன் தள்ளுபடி இல்லை. தமிழகத்தில் இதுவரை ஆட்சி செய்த கட்சிகள் தற்போது கூட்டணி குறித்து பேசி வருகின்றன. கூட்டணி என்பது மக்களை ஏமாற்றும் வேலை. அது தேர்தல் வரைக்கும் மட்டுமே.

அதன்பின்னர் தேனிலவு போன்று கூட்டணியை கலைத்து விடுகிறார்கள். 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் ஆண்ட கட்சிகள் ஏன் தனியாக நிற்க கூடாது?. நாங்கள் வருகிற தேர்தலை தனியாக நின்று சந்திப்போம். தில்லு இருந்தால் அவர்கள் தனியாக நிற்கட்டும். நாங்கள் ஆட்சி அமைத்தவுடன் ஆண்ட கட்சிகள் என கூறுபவர்களிடம் உள்ள மக்கள் பணத்தை பிடுங்கி, தமிழக அரசின் கடனை அடைப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com