புதுவை கவர்னர் எதிர்ப்பை மீறி 7 எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் வாரிய தலைவர் பதவி

புதுச்சேரியில், கவர்னர் எதிர்ப்பை மீறி 7 எம்.எல்.ஏ.க்களுக்கு வாரிய தலைவர் பதவிக்கு மத்திய உள்துறை அனுமதி வழங்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுவை கவர்னர் எதிர்ப்பை மீறி 7 எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் வாரிய தலைவர் பதவி
Published on

புதுச்சேரி:

புதுவையில் கடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்ததும், வேறு பதவிகள் இல்லாத எம்.எல்.ஏ.க்களுக்கு வாரிய தலைவர் பதவி வழங்கப்பட்டது.

இதன்படி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஜெயமூர்த்தி, பாலன், விஜயவேணி, தனவேலு, தீப்பாய்ந்தான், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சிவா, கீதா ஆனந்தன் ஆகியோருக்கு வாரிய தலைவர் பதவி வழங்கினார்கள்.

வாரிய தலைவர் பதவி வழங்க கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும். பொதுவாக 3 ஆண்டுகளுக்கு வாரிய தலைவர் பதவி வழங்கப்படும்.

ஆனால், கவர்னர் கிரண்பேடி ஒரு ஆண்டுக்கு மட்டுமே வாரிய தலைவர் பதவி வழங்கி ஒப்புதல் அளித்தார்.

கடந்த மாதம் 7-ந் தேதி யுடன் ஒரு ஆண்டு முடிந்து விட்டது. எனவே, அவர்கள் 7 பேருக்கும் பதவி நீட்டிப்பு செய்யும்படி கேட்டு அரசு சார்பில் கவர்னருக்கு கோப்பு அனுப்பப்பட்டது.

ஆனால், கவர்னர் ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார். இந்த கோப்பு பின்னர் மத்திய உள்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் முதல்- அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் டெல்லி சென்று உள்துறை மந்திரி, உள்துறை அதிகாரிகளை சந்தித்து வாரிய தலைவர் பதவி நீட்டிப்புக்கு அனுமதி கொடுக்கும்படி கேட்டனர்.

இதைத்தொடர்ந்து மத்திய உள்துறை பதவி நீட்டிப்புக்கு அனுமதி வழங்கி உள்ளது. இதற்கான உத்தரவு இன்று வந்துள்ளது. நாளை 7 எம்.எல்.ஏ.க்களும் பொறுப்புகளை ஏற்று கொண்டு பணிகளை தொடங்க உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com