

புதுடெல்லி:
2ஜி ஊழல் புகார்கள் தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்குகளை விசாரித்த டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கனிமொழி, ராசா உள்ளிட்ட 14 பேரையும் விடுவித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 3 தனியார் நிறுவனங்களும் விடுவிக்கப்பட்டன.
இந்த தீர்ப்பினை தி.மு.க.வினர் வரவேற்று கொண்டாடி வரும் நிலையில், தீர்ப்பு குறித்து மத்திய மந்திரி அருண்ஜெட்லி கூறியதாவது:-
2ஜி வழக்கில் டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நேர்மைக்கான சான்று அல்ல. தீர்ப்பை நேர்மைக்கான சான்றாக எடுத்துக் கொள்ள காங்கிரஸ் முயற்சிக்கிறது.
முந்தைய காங்கிரஸ் அரசின் கொள்கையால் நாட்டுக்கு இழப்பு ஏற்பட்டது உண்மையே. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அ.ராசாவின் கொள்கை நியாயமற்றது என 2012-ம் ஆண்டில் சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. முறைகேடு நடந்ததால் தான் 122 உரிமங்களை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது.
இவ்வாறு அவர் கூறினார்.