அதிகாலை 3 மணிக்கு மேல் சரியான தூக்கம் வரவில்லையா? தீர்வு சொல்லும் உளவியலாளர்

மன அழுத்தம், பழக்கவழக்கங்கள் தூக்கத்தை எப்படி கெடுக்கின்றன என்பது குறித்து உளவியலாளர் விளக்கியுள்ளார்.
Sleep Problem at 3 AM
Published on

இரவு நேரத்தில் தூங்கும் நபர்கள் திடீரென்று அதிகாலை 3 மணிக்கு எழுந்திருக்கும் போது, அவர்கள் பலவிதமான மனகுழப்பத்தால் பாதிக்கப்படுகிறார்கள். இதையடுத்து சமூக ஊடகங்களில் வலம் வரும் பலவித கருத்துகளால் மக்கள் குழப்பமடைய வேண்டாம் எனவும், அதற்கான காரணம் மற்றும் தீர்வை உளவியலாளர் மெஹெசபின் டோர்டி கூறியுள்ளார்.

மும்பையில் உள்ள சர் எச்.என். ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் மருத்துவமனை உளவியலாளர் மெஹெசபின் டோர்டி, தூங்கும்போது இரவில் சிறிது நேரம் கண்விழிப்பது முற்றிலும் இயல்பானது என்றும், அவ்வாறு எழுந்ததை பெரும்பாலான மக்கள் மறுநாள் நினைவில் கூட வைத்திருப்பதில்லை என்றும் கூறியுள்ளார்.

சரியான தூக்கமின்மை

இதுகுறித்து உளவியலாளர் டோர்டி கூறுகையில், “நீங்கள் ஒவ்வொரு இரவும் ஏறக்குறைய ஒரே நேரத்தில் விழித்துக்கொண்டு, மீண்டும் தூங்குவதற்கு சிரமப்பட்டால், ஏதோ ஒன்று உங்கள் தூக்கத்தை கெடுக்கிறது என்பதற்கான அறிகுறியாக இருக்க வாய்ப்புள்ளது.

இதற்கு மன அழுத்தம் ஒரு சாத்தியமான காரணமாக உள்ளது. உடலின் மன அழுத்த ஹார்மோன் என்று பொதுவாக அழைக்கப்படும் கார்டிசோல், நீங்கள் தூங்கி விழித்தெழுவதற்கு தயாராவதற்கு உதவும் வகையில், அதிகாலை நேரங்களில் இயற்கையாகவே அதிகரிக்கிறது.

ஒருவர் நாள்பட்ட மன அழுத்தம், பதட்டம், உணர்ச்சி ரீதியான சிரமம் அல்லது சோர்வு ஆகியவற்றை மேற்கொள்ளும் போது, இந்த அமைப்பு அதிக உணர்திறன் கொண்டதாக மாற வாய்ப்புள்ளது.

இதன் விளைவாக, இரவு நேரத்தில் உடல் அதிக விழிப்புடன் இருக்கக்கூடும். இதனால் விழித்தெழுவது எளிதாகவும், மீண்டும் உறங்குவது கடினமாகவும் ஆகிறது.

இருப்பினும், அதிகாலை 3 மணிக்கு ஏற்படும் ஒவ்வொரு விழிப்புக்கும் கார்டிசோல்தான் காரணம் என்று கருதிவிடக் கூடாது. வேறு பல காரணிகளாலும் தூக்கம் பாதிக்கப்படலாம். பதட்டம் மற்றும் மனச்சோர்வு ஆகியவை பொதுவான காரணங்களாக அறியப்படுகின்றன.

காரணிகள்

மேலும் தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறல், நாள்பட்ட வலி, நெஞ்செரிச்சல் மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் போன்ற மருத்துவ நிலைகளும் இந்த கண் விழிப்பிற்கு காரணங்களாக உள்ளது.

சில மருந்துகளும் தூக்கத்திற்கு இடையூறு விளைவிக்கக்கூடும். பகலின் பிற்பகுதியில் காஃபி அருந்துவது, படுக்கைக்குச் செல்வதற்கு முன் செல்போன், டி.வி. நீண்ட நேரமாக பார்ப்பது, மாலையில் மது அருந்துவது, மேலும் சரியாக தூங்காமல் இருப்பது போன்ற அன்றாட பழக்க வழக்கங்கள் கூட, நள்ளிரவில் விழித்துக்கொள்வதற்கான வாய்ப்பை அதிகரிக்கலாம்.

பலர் குறிப்பாகக் கலக்கமடைவது, அவர்கள் விழித்தெழுந்த பிறகு நடக்கும் நிகழ்வுகள்தான். திடீரென்று, எண்ணங்கள் வேகமாக ஓடத் தொடங்குகின்றன. பகல் நேரத்தில் சமாளிக்கக்கூடியதாக தோன்றிய பிரச்சனைகள், நள்ளிரவில் பெரும் சுமையாகத் தோன்றலாம்.

வேலை, உறவுகள், நிதிநிலை அல்லது உடல்நலம் குறித்த சிறிய கவலைகள், திடீரென்று அவை உண்மையில் இருப்பதை விடப் பெரிதாகத் தோன்றக்கூடும். இதற்கு ஏதோ ஒன்று தவறாக நடக்கிறது என்று அர்த்தமல்ல.

இரவு நேரத்தில், கவனச்சிதறல்கள் குறைவாக இருக்கும்போதும், நீங்கள் உங்கள் எண்ணங்களுடன் தனியாக இருக்கும்போதும், கவலைகள் மிகவும் தீவிரமாக உணரப்படலாம்.

மன அழுத்தத்தால் உங்கள் உடல் ஏற்கனவே சற்றே தூண்டப்பட்டிருந்தால், உங்கள் மனம் சிந்திப்பதற்கோ அல்லது தீர்ப்பதற்கோ உரிய விஷயங்களை விரைவாகத் தேடத் தொடங்கலாம்.

நீங்கள் அதிகாலை 3 மணிக்கு எழுந்தீர்கள் என்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல், விழிக்கும்போது என்ன நடக்கிறது என்பதை கவனியுங்கள்.

நீங்கள் வேலையை பற்றி யோசிக்கிறீர்களா? பதட்டமாக உணர்கிறீர்களா? உங்களுக்கு அசௌகரியமாக, வலியாக, உடல் அதிக சூடாக, மூச்சுத்திணறலாக இருக்கிறதா அல்லது திடீர் உடல் வெப்பம் போன்ற அறிகுறிகளை உணர்கிறீர்களா? என்பதை கவனியுங்கள்.

பெரும்பாலான நேரங்களில், அதிகாலை 3 மணிக்கு விழிப்பது என்பது உங்கள் உடல் உங்களுக்கு மறைமுகமாக சொல்ல முயற்சிக்கும் செய்தி அல்ல.

மன அழுத்தம், வாழ்க்கை முறைப் பழக்கங்கள் அல்லது ஒரு அடிப்படை மருத்துவப் பிரச்சினை என எதுவாக இருந்தாலும், உங்கள் நிம்மதியான உறக்கத்திற்கு ஏதோ ஒன்று இடையூறு செய்கிறது என்பதை உங்கள் உடல் சுட்டிக்காட்டும் ஒரு வழிதான் அது.

தீர்வு

இது பல வாரங்களுக்குத் தொடர்ந்தால், உங்கள் பகல் நேரச் செயல்பாடுகளை பாதித்தால் அல்லது உங்களை மிகவும் சோர்வடையச் செய்தால், இதற்கான விடையை இணையத்தில் உள்ள கோட்பாடுகளை நம்பித் தேடுவதை விட, ஒரு மருத்துவரிடம் பேசுவது நல்லது” என்று உளவியலாளர் கூறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com