search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பண்ணாரியம்மன் கோவிலில் இன்று அதிகாலை லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி வழிபாடு
    X

    பண்ணாரியம்மன் கோவிலில் இன்று அதிகாலை லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி வழிபாடு

    • இன்று மதியம் 1 மணி வரை பக்தர்கள் குண்டம் இறங்குவர்.
    • பண்ணாரி அம்மன் வீணை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. சுற்றுலா தலமான இக்கோவிலுக்கு ஈரோடு, திருப்பூர் கோவை, நீலகிரி மாவட்டங்களிலிருந்தும், அண்டை மாநிலமான கர்நாடகாவிலிருந்தும் லட்சக்கணக்காண பக்தர்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.

    இக்கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இத்திருவிழாவில் லட்சக்கணக்காண பக்தர்கள் வரிசையில் நாள்கணக்கில் காத்திருந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவர்.

    இந்நிலையில் இந்த ஆண்டு குண்டம் திருவிழா கடந்த மாதம் 20-ந் தேதி இரவு பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் திருவீதி உலா 20-ந் தேதி இரவு புறப்பட்டு பவானிசாகர் மற்றும் சத்தியமங்கலம், உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் திருவீதி உலா நடைபெற்று 28-ந் தேதி இரவு அம்மன் சப்பரம் கோவிலை வந்தடைந்தது.

    அதைத்தொடர்ந்து அன்றிரவு நிலக்கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் கோவில் தினமும் மலைவாழ் மக்கள் தாரை, தப்பட்டை, வாத்தியத்துடன் அம்மன் புகழ்பாடும் களியாட்டமும், நித்தியப்படி பூஜையும் நடைபெற்றது.

    நேற்றுமுன்தினம் மாலை 3 மணிக்கு பரிவார தெய்வங்களான மாதேஸ்வரன், சருகுமாரியம்மன், வண்டிமுனியப்பன் மற்றும் ராகு, கேது தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. நேற்று அதிகாலை 4 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜையும், காலை 5 மணிக்கு குண்டத்திற்கு தேவையான கரும்பு வெட்ட செல்லும் நிகழ்ச்சியும் நேற்று காலை 6 மணிக்கு அம்மன் ஊர்வலமும் நடைபெற்றது.

    மாலையில் குண்டத்திற்கு எரிகரும்புகள் அடுக்கும் பணியும் இரவு 8 மணிக்கு குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அக்னி இடப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று அதிகாலை 2 மணிக்கு சகல வாத்தியங்களுடன் தெப்பக்குளம் சென்று அம்மன் அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அச்சமயம் குண்டத்திற்கு இடப்பட்ட நெருப்பினை சிக்கரசம்பாளையம், இக்கரைநெகமம் புதூர் மற்றும் வெள்ளியம் பாளையம் கிராமங்களை சேர்ந்த பெரியவர்கள் மூங்கில் கம்புகளால் தட்டி நெருப்பினை சீராக பரப்பி 11 அடி நீளம் 5 அடி அகலத்தில் குண்டத்தை தயார் செய்தனர்.

    தெப்பக்குளம் சென்ற அம்மன் சரியாக 3.15 மணிமுதல் 3.30 மணிக்குள் குண்டத்தின் முன்புறம் அம்மன் சப்பரம் வந்து சேர்ந்தபின் குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு குண்டத்தை சுற்றிலும் கற்பூரம் ஏற்றி வழிபாடு நடைபெற்றது.

    பின்பு சரியாக 3.45 மணிமுதல் 4 மணிக்குள் கோவில் தலைமை பூசாரி ராஜசேகர் குண்டம் இறங்கினார். அதைத்தொடர்ந்து அம்மன் சப்பரம் குண்டத்தில் இறங்கிய பின் வரிசையில் காத்திருந்த பக்தர்கள் குண்டம் இறங்க அனுமதிக்கப்பட்டனர்.

    இதில் ஆண்கள், பெண்கள், திருநங்கைகள், ஆண், பெண் போலீசார், அரசியல் கட்சியினர், சிறுவர், சிறுமிகள் உள்பட லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தி வழிபட்டனர். இன்று மதியம் 1 மணி வரை பக்தர்கள் குண்டம் இறங்குவர்.

    அதனை தொடர்ந்து மதியத்திற்கு மேல் சுற்று வட்டார பகுதி கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கால்நடைகளை குண்டத்தில் இறக்குவர். குண்டம் இறங்கும்போது கருவறையில் உள்ள பண்ணாரி அம்மன் வீணை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். குண்டம் இறங்கும் பக்தர்கள் நேரடியாக கோவிலுக்குள் சென்று அம்மனை தரிசித்தனர்.

    குண்டத்தை சுற்றி தயார் நிலையில் தீயணைப்புத்துறையினர் நிறுத்தப்பட்டு இருந்தனர். குண்டத்தில் ஓடி வந்த பக்தர்களை அவர்கள் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். மேலும் குண்டம் இறங்க குடும்பம் குடும்பமாக பொதுமக்கள் வரிசையில் காத்து நின்றனர்.

    குண்டம் விழாவை தொடர்ந்து நாளை (5-ந் தேதி) மதியம் மாவிளக்கு பூஜையும், இரவு புஷ்பரத ஊர்வலமும் நடைபெறுகிறது. 6-ந்தேதி மஞ்சள் நீராடுதலும், 7-ந்தேதி மாலை சுமங்கலி பெண்கள் பங்கேற்கும் திருவிளக்கு பூஜை மற்றும் தங்க தேர் ஊர்வலமும் நடைபெறு கிறது. 10-ந் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

    குண்டம் திருவிழாவையொட்டி ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 1500-போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நீர் மோர், அன்னதானமும் வழங்கப்பட்டது.

    Next Story
    ×