என் மலர்
வழிபாடு

நாளை ஆனி அமாவாசை- வழிபாடு சிறப்புகள்...
- பித்ரு வழிபாட்டில் முக்கியப் பங்கு வகிப்பது கருப்பு எள்ளும் புனிதம் நிறைந்த தர்ப்பைப் புல்லும்தான்.
- அமாவாசை தினங்களில் மாமிசம் சாப்பிடக்கூடாது. வெங்காயம், பூண்டு தவிர்ப்பது நல்லது.
சூரியன் மிதுன ராசியில் பிரவேசிக்கும் மாதமே ஆனி மாதம் எனப்படுகிறது. நமது வேத சாஸ்திரங்கள் ஒரு வருடத்தில் மொத்தம் 96 தர்ப்பணங்கள் இருப்பதாக கூறுகின்றன. தமிழ் வருடப்பிறப்பு, சூரிய கிரகணம், அமாவாசை, மகாளய அமாவாசை உட்பட 96 தர்ப்பணங்களையும் ஒருவர் செய்வது சிறப்பான பலன்களைத் தரும் என்றும் அந்த சாஸ்திரங்கள் அறிவுறுத்துகின்றன. அந்த வகையில் நாளை (புதன்கிழமை) ஆனி மாத அமாவாசை வருகிறது.
ஆனால் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6.56 மணிக்கு அமாவாசை தொடங்குகிறது. எனவே அமாவாசை நேர இரவு வழிபாட்டை இன்றிரவு செய்யலாம்.
நாளை அதிகாலையில் குளித்து முடித்து, உங்கள் ஊரில் இருக்கும் ஆற்றங்கரை அல்லது குளக்கரையில் மைத்ர முகூர்த்த நேரம் எனப்படும் அதிகாலை நேரத்தில் வேதியர்களை கொண்டு மறைந்த உங்கள் முன்னோர்கள், உறவினர்களுக்கு திதி தர்ப்பணம் தர வேண்டும். வீட்டின் பூஜையறையை சுத்தம் செய்து தீபம் ஏற்ற வேண்டும். பின்பு உங்கள் வீட்டிலிருக்கும் மறைந்த முன்னோர்களின் படத்திற்கு பூக்கள் சமர்ப்பித்து, தூபங்கள் கொளுத்தி வணங்க வேண்டும்.
சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அமாவாசை திதி, தர்ப்பணம் போன்றவற்றை தர இயலாதவர்கள் அன்றைய தினம் உங்கள் வீட்டிலேயே முன்னோர்களை வழிபட்டு கருப்பு மற்றும் வெள்ளை எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு உணவாக வைப்பதால் முன்னோர்களுக்கு திதி அளித்த பலன் உண்டாகும்.
தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை ஒத்திவைத்துவிட்டு பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடித்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய பூஜைகளைச் செய்யலாம். அமாவாசை தினங்களில் மாமிசம் சாப்பிடக்கூடாது. வெங்காயம், பூண்டு தவிர்ப்பது நல்லது. தர்ப்பையில் படும் தர்ப்பணங்களை ஸ்வதா தேவி எடுத்துச் செல்வதாகப் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
பித்ரு வழிபாட்டில் முக்கியப் பங்கு வகிப்பது கருப்பு எள்ளும் புனிதம் நிறைந்த தர்ப்பைப் புல்லும்தான். இந்த இரண்டுமே மிக உயர்ந்த சக்தி கொண்டவை. எள் என்பது மகாவிஷ்ணுவின் வியர்வையிலிருந்து தோன்றியதாகும். தர்ப்பணம், சிராத்தம் செய்யும்போது கருப்பு எள்ளை பயன்படுத்தும்போது பித்ருக்கள் முழு திருப்தி அடைகிறார்கள் என்பது ஐதீகம்.
தொழில் மற்றும் வியாபாரங்களில் ஈடுபடுபவர்கள் நோய்களால் பாதிக்கப்பட்டு உடல்நலம் தேறுபவர்கள் ஆனி அமாவாசை தினத்தில் திருஷ்டி பூசணிகாய் அல்லது எலுமிச்சை பழம் வாங்கி, அதன் மீது கற்பூரம் கொளுத்தி உங்கள் தொழில், வியாபார இடங்களை திருஷ்டி கழித்து அதற்குரிய பூசணிக்காயை உடைத்தும், எலுமிச்சம் பழத்தை நசுக்கியும் திருஷ்டி கழித்திட வேண்டும்.
நாளைய அமாவாசைக்கு ஒரு சிறப்பு உண்டு. இந்த நாள் ரொம்ப விசேஷமான நாள். சாபங்களையும் பாபங்களையும் துடைத்துத் தூய்மையாக்கும் நாள்.
சில குடும்பங்களில் பரம்பரை பரம்பரையாக கொடிய வினைகள் சூழ்ந்து நிம்மதி குறைந்து போகும். எல்லா சுப காரியங்களிலும் தடைகள் ஏற்படும் குடும்பங்களில் விபத்துக்களும் அகால மரணங்களும்கூட நிகழும் இதுபோன்ற கொடிய பாவங்கள் தீர பிதுர் தேவதைகளை வணங்க வேண்டும்.
நாளை காலதேவனின் 3-வது ராசியில், (சகோதர ராசி) அமாவாசை நிகழ்வதால், அவசியம் நீத்தார் வழிபாடு நடத்த வேண்டும். அதன் மூலமாக குடும்பத்தில். சகோதர ஒற்றுமை பெருகும். அதற்கு காரணம், இன்று செவ்வாய்க்குரிய மிருகசீரிஷம் நட்சத்திரம். அதில் சந்திரன் பிரவேசிக்கும்பொழுதுதான் அமாவாசை நிகழ்கிறது. செவ்வாய்க்கிழமை சகோதரகாரகன் அல்லவா. எனவே நாளை செய்யும் முன்னோர் வழிபாடு குடும்ப ஒற்றுமையை ஓங்க செய்யும்.
வசதி வாய்ப்பு இருப்பவர்கள் ஒரு பெரியவரை அழைத்து வீட்டில் சாப்பாடு போட்டு உங்களால் இயன்ற தட்சணை தாருங்கள். முன்னோர்கள் ஆசி கட்டாயம் கிடைக்கும்.
திருவாதிரை நட்சத்திரத்தில் வரும் ஆனி அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதால் 12 ஆண்டுகள் தர்ப்பணம் கொடுத்த பலன் நமக்கு கிடைக்கும் என்று சொல்வார்கள். ஆனால் திருவாதிரை நட்சத்திர நேரம் நாளை (புதன் கிழமை) பகல் 11.39 மணிக்குத்தான் தொடங்குகிறது. அதிலிருந்து மாலை 5 மணி வரை நடத்தப்படும் முன்னோர் வழிபாடு சிறந்த பலன்களைத் தரும். மேலும் பித்ரு சாபம், பித்ரு தோஷம் உள்ளிட்ட அனைத்து விதமான தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம். அதனால் இந்த நாளில் புனித நீராடுவது, மந்திர ஜபம் செய்வது, தானம் செய்வது உள்ளிட்ட அனைத்துமே பல மடங்கு அதிக பலனை தரக் கூடியதாகும்.
சிவ பெருமானுக்குரிய திருவாதிரை நட்சத்திரத்துடன் இணைந்து அமாவாசை என்பதால் இந்த நேரத்தில் செய்யப்படும் வழிபாடு மற்றும் தானங்கள் இரண்டு மடங்கு பலனை தரக் கூடியதாகும்.
நம் ஜாதகத்தில் கிரக கோளாறுகள், பித்ரு சாபங்கள் ஆகியவை நீங்க, சில குறிப்பிட்ட பொருட்களை தானம் வழங்குவது மிகவும் முக்கியமானதாகும். ஆஷாட அமாவாசை என்கிற இந்த ஆனி மாத அமாவாசையில் ஏழைகளுக்கு உணவு மற்றும் பணத்தை தானமாக வழங்குவது மிகவும் சிறப்பானதாகும்.
மேலும் நாளை கோதுமை மற்றும் அரிசியை தானமாக வழங்குவது சூரியன் மற்றும் சந்திரனின் ஆசிகளை பெறுவதுடன், ஜாதகத்தில் இந்த இரண்டு கிரகங்களின் பலத்தையும் அதிகரிக்கச் செய்யும். ஆயுள், ஆரோக்கியம், அழகு, உயர் பதவி, உடல் வலிமை, தலைமை பதவி, அதிகாரம், செல்வம், மனநிறைவு ஆகியவற்றை தருவது இந்த இரண்டு கிரகங்களும் தான்.
நாளை முன்னோர்களை வழிபடுவதால் குடும்பத்தில் சிக்கல்கள் விலகி சுபிட்சங்கள் பெருகும். திருமணம் காலதாமதமான நிலையில் இருப்பவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். வீண் பண விரயங்கள் ஏற்படுவது நீங்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றி பெறும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் உண்டாகும்.






