

இந்த விழாவில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை சென்னை வந்தடைந்தார். பிரதமர் மோடியை தமிழக முதலமைச்சர், ஆளுநர், அமைச்சர்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றனர்.
அங்கிருந்து காரில் புறப்படும் பிரதமர் நரேந்திர மோடி, காலை 10.30 மணி அளவில் ‘தினத்தந்தி’ பவள விழா நடைபெறும் சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்துக்கு வருகிறார். அவரை, ‘தினத்தந்தி’ இயக்குநர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், ‘மாலைமலர்’ இயக்குநர் பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோர் வரவேற்று மேடைக்கு அழைத்துச் செல்கிறார்கள்.
சரியாக காலை 10.30 மணிக்கு துவங்கும் இந்த நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். நடிகர்கள் ரஜினிகாந்த், பிரபு, சிவக்குமார், அர்ஜுன், சூர்யா, கார்த்தி, தனுஷ், எஸ்.வி.சேகர், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். மேலும் கவிஞர் வைரமுத்து, கலைப்புலி எஸ்.தாணு, ஜாக்குவார் தங்கம், சவுந்தர்யா ரஜினிகாந்த் உள்ளிட்டோரும் விழாவில் பங்கேற்றுள்ளனர்.