Garudan

Garudan

கோயில் சொத்தை அபகரிக்க நினைக்கும் அரசியல்வாதியை தடுக்க போராடும் நண்பர்கள் கதை.
Published on
Garudan(3.5 / 5)

கதைக்களம்

சசிகுமார், உன்னி முகுந்தன் இருவரும் நெருங்கிய நண்பர்கள். உன்னி முகுந்தனுக்கு விசுவாசியாக இருக்கிறார் சூரி. தேனி மாவட்டம் அருகே உள்ள கிராமத்தில் வாழ்ந்து வருகிறார்கள். சிறுவயதிலேயே ஆதரவற்ற இவர்களை வடிவுக்கரசி அரவணைத்து வளர்த்து வருகிறார்.

இந்த ஊரில் கோம்பை என்னும் அம்மன் கோவில் இருக்கிறது. இந்த கோவில் தலைவராக வடிவுக்கரசி இருக்கிறார். இந்த கோவிலுக்கு சொந்தமான நிலம் ஒன்று சென்னையில் இருக்கிறது. இதை அபகரிக்க முயற்சி செய்கிறார் அமைச்சர் ஆர்.வி.உதயகுமார்.

கோம்பை கோவிலில், நிலத்திற்கு சொந்தமான ஆவணம் இருப்பதை அறிந்து அதை எடுக்க திட்டம் போடுகிறார் அமைச்சர் ஆர்.வி.உதயகுமார். இதற்கு தடையாக சசிகுமார் செயல்படுகிறார். சசிகுமாரின் நண்பரான உன்னி முகுந்தனை தன் பக்கம் சாய்த்து ஆவணத்தை எடுக்க நினைக்கிறார்.

இறுதியில் அமைச்சரின் திட்டம் நிறைவேறியதா? சசிகுமார், உன்னி முகுந்தன் நட்பு என்ன ஆனது? சூரி யாருக்கு சாதகமாக செயல்பட்டார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்

படத்தில் ஆதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் சசிகுமார், நட்புக்கு இலக்கணமாக நடித்து மனதில் பதிந்து இருக்கிறார். இவருடைய எதார்த்தமான நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது. கருணாகரன் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் உன்னி முகுந்தன், குழப்பத்தில் நடித்தது போல் இருந்தது. நண்பனை பகைத்து கொள்ளும் போதும், குடும்ப சூழ்நிலையை உணரும் போதும் கவனிக்க வைத்து இருக்கிறார்.

சொக்கனாக வரும் சூரி, அபார நடிப்பை வெளிப்படுத்தி கைத்தட்டல் வாங்கி இருக்கிறார். உன்னி முகுந்தனுக்கு விசுவாசியாக இருக்கும் போதும், சசிகுமார் குடும்பத்தை காக்கும் போதும் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். குறிப்பாக உன்னி முகுந்தனிடம் உண்மை பேசும் காட்சியில் ரசிக்க வைத்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் ஸ்கோர் செய்து இருக்கிறார்.

அமைச்சர் ஆர் வி உதயகுமார், போலீஸ் அதிகாரி சமுத்திரக்கனி, தியேட்டர்காரர் மைம் கோபி ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. யாரும் எதிர்பாராத நடிப்பை கொடுத்திருக்கிறார் சிவேதா. சசிகுமாரை நினைத்து உருகும் காட்சியில் கண்கலங்க வைக்கிறார்.

இயக்கம்

கோவில் நிலத்தை அபகரிக்க நினைக்கும் அரசியல்வாதியின் சூழ்ச்சியை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் துரை செந்தில்குமார். இதில் நட்பு, அண்ணன் தம்பி பாசம், குடும்ப பாசம் என கலந்து கொடுத்து இருக்கிறார். சூரியின் கதாபாத்திரத்தை மிகைப்படுத்தாமல் அழகாக வடிவமைத்து இருப்பது சிறப்பு. கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார்.

இசை

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கவரவில்லை. ஆனால், பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார்.

ஒளிப்பதிவு

ஆர்த்துர் வில்சனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியை புழுதி பறக்க படம் பிடித்து இருக்கிறார்.

தயாரிப்பு

லார்க் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் கருடன் திரைப்படத்தை தயாரித்துள்ளது.

வீடியோக்கள்

கருடன்

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com