Amaran

Amaran

மறைந்த ராணுவ வீரரான மேஜர் முகுந்த்தனின் வாழ்க்கை கதை
Published on
Amaran(3.5 / 5)

கதைக்களம்

சாய் பல்லவியின் பார்வையில் கதை தொடங்குகிறது. மெட்ராஸ் கிறித்துவ கல்லூரியில் தனக்கு சீனியராக இருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் சாய் பல்லவிக்கும் இடையே காதல் மலர்கிறது. சிவகார்த்திகேயன் ஒரு நடுத்தர குடும்பத்தை சார்ந்தவர் இவருக்கு சிறு வயதிலிருந்தே இராணுவத்தில் சேர வேண்டும் என்பது கனவு.

சிவகார்த்திகேயனின் காதலை பற்றி சாய் பல்லவி அவரது வீட்டில் கூற அவர்கள் அதற்கு மறுக்கிறார்கள். பிறகு சிவகார்த்திகேயன் அவரது பெற்றோர்களை சம்மதிக்க வைத்து இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். இவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறக்கிறது.

பின் இராணுவத்தில் கேப்டன், மேஜர் என அடுத்தடுத்த பதவிக்கு முன்னேறுகிறார் சிவகார்த்திகேயன். அதற்கு பின் 44 ராஷ்ட்ரிய ரைஃபில்ஸ் சீதா படைப்பிரிவின் கம்பேனி கமாண்டராக பொறுப்பேற்கிறார். காஷ்மீரில் உள்ள ஒரு தீவிரவாத கும்பலை பிடிப்பதற்கு சிவகார்த்திகேயன் மற்றும் அவரது படை முயற்சி செய்கிறது. இந்த முயற்சியில் பல இன்னல்களை சந்திக்கிறார் சிவகார்த்திகேயன்.

இதற்கு அடுத்து சிவகார்த்திகேயனின் வாழ்க்கை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்

மேஜர் முகுந்த்தனின் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இராணுவ வீரருக்கே இருக்கும் தனி மிடுக்கு, உடல் தோற்றம் என தன்னை முழுதாக ஒரு இராணுவ வீரரைப் போல் உணர்ந்து கதாப்பாத்திரத்தில் வாழ்ந்து இருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் ஸ்கோர் செய்துள்ளார். இந்து ரெபெகா வர்கீஸ் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் சாய் பல்லவி. காதல் காட்சிகளில் ரசிகர்களை கிரங்கடிக்க செய்துள்ளார். இவரது காதல் காட்சிகள் தான் படத்தின் பெரிய பலமாக அமைந்துள்ளது. எமோஷன், காதல் என தனது நடிப்பு திறமையால் பார்வையாளர்களை கட்டிப்போடுகிறார். பிற நடிகர்கள் அவர்களுக்கு கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளனர்.

இயக்கம்

மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை கதையை மிக நெருக்கமாக உண்மைத்தன்மையுடன் இயக்கியுள்ளார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி. காஷ்மீர் என்ற சர்ச்சைக்குரிய கதைக்களத்தை கையாண்டாலும் திரைப்படம் தீவிர அரசியல் விவாதங்களுக்குள் செல்லவில்லை. சிவகார்த்திகேயன் ஈடுப்படும் ஆப்ரேஷன் மற்றும் மிஷின்கள் எல்லாம் விறுவிறுப்பாக காட்சிபடுத்தி இருக்கிறார். சாய் பல்லவி மற்றும் சிவகார்த்திகேயன் கதாப்பாத்திரத்திற்கு இடையே உள்ள காதலை மிக ஆழமாக காட்சிபடுத்தியது படத்திற்கு பெரிய பலம். எமோஷனல் காட்சிகள் பார்வையாளர்களுக்கு மிகவும் கனெக்ட் ஆகிறது.

இசை

ஜி.வி பிரகாஷின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம். ஹே மின்னலே பாடல் பார்வையாளர்களுக்கு ட்ரீட் என சொல்லலாம்.

ஒளிப்பதிவு

ஒளிப்பதிவாளர் சாய் திறமையான ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். ஆக்சன் காட்சிகளில் திறமையாக கையாண்டுள்ளார்.

தயாரிப்பு

ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் & சோனி பிக்சர்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

வீடியோக்கள்

அமரன்

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com