பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசிய கருத்துகள் தமிழக முதல்வர் விஜயை மையப்படுத்தி சர்ச்சையானது ஏன்?

விஜய் சேதுபதி தனது உரையாடலில் முதலமைச்சர் விஜயையோ, அவரது கட்சியையோ அல்லது எந்தவொரு அரசியல் இயக்கத்தையோ பெயர் குறிப்பிடவில்லை.
Vijay Sethupathi-Chief Minister Vijay
Published on
Summary

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில், போட்டியாளர் ஷாதிகாவிடம் தலைமைப்பண்பு குறித்து தொகுப்பாளர் விஜய் சேதுபதி பேசிய கருத்துகள், தற்போது சின்னத்திரையை தாண்டி தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

பிக்பாஸ் வீட்டின் முதல் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஷாதிகாவிடம் உரையாடிய விஜய் சேதுபதி, தலைவருக்கான பொறுப்புகள் குறித்துப் பேசினார். "நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைக் கொடுக்கக் கூடாது. பிரச்சனை என்று வரும்போது, அதை எதிர்கொள்ளாமல் எதிர்த்தரப்பினர் மீது பழியைப் போட்டுவிட்டு ஓடிவிடுவதோ அல்லது விலகிக் கொள்வதோ ஒரு சிறந்த தலைவருக்கு அழகல்ல" என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த உரையாடலின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் விஜய் மற்றும் அவரது தமிழக வெற்றி கழக கட்சியின் ஆதரவாளர்கள், இந்த கருத்துகள் மறைமுகமாக தங்களது தலைவரை தாக்குவதற்காகவே பேசப்பட்டவை எனப் பொருள் கொள்ளத் தொடங்கினர்.

முதல்வர் விஜய்-விஜய் சேதுபதி இடையேயான திரை நட்பு

விஜய் சேதுபதி தனது உரையாடலில் முதலமைச்சர் விஜயையோ, அவரது கட்சியையோ அல்லது எந்தவொரு அரசியல் இயக்கத்தையோ பெயர் குறிப்பிடவில்லை. இருந்தபோதிலும், 'மாஸ்டர்' திரைப்படத்தில் முதல்வர் விஜயுடன் இணைந்து நடித்த விஜய் சேதுபதி, பல மேடைகளில் முதல்வர் விஜயை "அண்ணா" என்று அன்போடு அழைத்து வந்தார். இவ்வாறான சூழலில், அவர் பேசியது முதல்வர் விஜயை விமர்சிப்பது போல உள்ளது என கூறித் தமிழக வெற்றி கழகத்தின் சில ஆதரவாளர்கள் இணையத்தில் விஜய் சேதுபதியை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர்.

தனியார் தொலைக்காட்சி விளக்கம்

சர்ச்சை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பும் தனியார் தொலைக்காட்சி நிர்வாகம் ஒரு தெளிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், "பிக் பாஸ் நிகழ்ச்சியில் இடம்பெறும் உரையாடல்கள் மற்றும் நிகழ்வுகள் முற்றிலும் பொழுதுபோக்கு சார்ந்தவை மட்டுமே. நிகழ்ச்சிக்கு வெளியே உள்ள நபர்களையோ, அரசியல் இயக்கங்களையோ அல்லது அமைப்புகளையோ மையப்படுத்தி இந்த கருத்துகள் பேசப்படவில்லை. எனவே, இதைப் புற உலக நிகழ்வுகளோடு தொடர்புபடுத்தி பார்ப்பது தவறானது" என்று விளக்கம் அளித்து முற்றுப்புள்ளி வைக்க முயன்றுள்ளது.

இருப்பினும், பிக் பாஸ் மேடையில் தான் பேசிய கருத்துகள் குறிப்பிட்ட அந்த அரசியல் தலைவரையோ அல்லது அவரது அரசியல் பயணத்தையோ மையப்படுத்திச் சொல்லப்பட்டவைதான் என்று விஜய் சேதுபதி இதுவரை நேரடியாக எவ்வித அதிகாரப்பூர்வ விளக்கத்தையோ அல்லது அறிக்கையையோ வெளியிடவில்லை. அதேவேளையில், சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த ஊகங்களையும், அரசியல் விமர்சனங்களையும் அவர் நேரடியாக மறுக்கவோ அல்லது மறுப்பு தெரிவிக்கவோ இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது. திரையுலகைச் சார்ந்த பிரபலங்கள் பேசும் சாதாரண உரையாடல்கள் கூட, தமிழக அரசியலின் தற்போதைய சூழலில் எவ்வாறு தீவிரமாகப் பார்க்கப்படுகின்றன என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு மிகச்சிறந்த உதாரணமாக மாறியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com