டி.ஆர் - பாக்யராஜ் இணைந்த ஒரே படம்... உயிர் கொடுக்கும் இளையராஜா - 'கன்னடத்து பைங்கிளி' மெகா கூட்டணி!

35 ஆண்டுகளுக்குப் பின்னர் மனைவியுடன் இணைந்து நடித்த நடிகர் பாக்யராஜ்.
டி.ஆர் - பாக்யராஜ் இணைந்த ஒரே படம்... உயிர் கொடுக்கும் இளையராஜா - 'கன்னடத்து பைங்கிளி' மெகா கூட்டணி!
Published on

எம்.பி.எம். எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் இந்துமதி கோபி தயாரிப்பில் ஆர். கோபி வழங்கும் ‘கன்னடத்து பைங்கிளி’ திரைப்படத்தை ‘சிங்கம் புலி’, 'மொட்ட சிவா கெட்ட சிவா'  படங்களை இயக்கிய சாய் ரமணி எழுதி இயக்கியுள்ளார்.

பன்முக வித்தகரான டி. ராஜேந்தர் இசையமைக்கும் இப்படத்தில் அவரது இசையில் முதல் முறையாக இசைஞானி இளையராஜா பாடியுள்ளார்.

டிஆர் - பாக்யராஜ் இணைவு

மேலும், சமீபத்தில் மறைந்த நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் நடித்த கடைசி படமாக இது அமைந்துள்ளது. டி.ஆர். மற்றும் பாக்யராஜ் இணைந்து பணியாற்றிய ஒரே படம் 'கன்னடத்து பைங்கிளி' என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாயகனின் தந்தையாக படம் முழுவதும் வரும் பாத்திரத்தில் சிறப்பான பங்களிப்பை பாக்யராஜ் வழங்கியுள்ளார்.  

35 ஆண்டுகளுக்கு பின் மனைவியுடன் இணையும் பாக்யராஜ்

சுமார் 35 ஆண்டுகளுக்கு பிறகு பாக்யராஜும், அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜும் இணைந்து நடித்த படமும் இது தான். அதுவும் கணவன் மனைவியாகவே நடித்துள்ளனர். இப்படத்தில் புதுமுகங்கள் அமல் அஜித், ஆதியா முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர்.

சிங்கம் புலி, புகழ், ஆதவன், லொள்ளு சபா ஜீவா உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். கூமாபட்டி தங்கபாண்டி, ஆட்டோக்காரன் தீபக் மற்றும் இடியாப்பம் சிவா உள்ளிட்ட ஐந்து பிரபல யூடியூபர்கள் இப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகின்றனர். 

இவர்களுடன் ஸ்ரீகாந்த் ஐயங்கார் எனும் தெலுங்கில் பிரபலமாக இருக்கக்கூடிய நடிகர் அறிமுகம் ஆகிறார். கர்நாடகாவில் இருந்து ஸ்வேதா எனும் நடிகையும் அறிமுகமாகிறார்.

'பேராண்மை', 'மீகாமன்', 'வாகா' படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த எஸ். ஆர். சதீஷ் குமார் 'கன்னடத்து பைங்கிளி' திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டைட்டில் போஸ்டர் விரைவில் வெளியாக உள்ளது.

தமிழ்நாடு- கர்நாடகா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஓசூரில் 1990களில் நடைபெற்ற உண்மை சம்பவத்தின் அடிப்படையில் கதை அமைக்கப்பட்டுள்ளது என இயக்குநர் சாய் ரமணி தெரிவித்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com