தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார், தனது பிசியான படப்பிடிப்புப் பணிகளுக்கு இடையேயும், தனது ஆசை மகள் அன்வியுடன் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் ஜாலியாகப் பயணம் செய்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷும், பிரபல பின்னணி பாடகி சைந்தவியும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்களது 11 ஆண்டுகால திருமண வாழ்க்கையை விவாகரத்து மூலம் முடித்துக் கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
இந்த அறிவிப்பு திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. எனினும், தங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தாலும், தங்களது ஒரே மகளான அன்வியின்(Anvi) எதிர்காலம் மற்றும் வளர்ப்பு விஷயத்தில் இருவரும் எந்தக் குறையும் வைக்காமல், பெற்றோராக நட்போடு இணைந்து மகளைப் பராமரித்து வருகின்றனர்.
தற்போது தமிழ் மற்றும் தென்னிந்திய சினிமாவில் டாப் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் 24 மணி நேரமும் பிசியாக வலம் வரும் ஜி.வி.பிரகாஷ், தனது ஆசை மகளுக்காகப் பிரத்யேகமாக நேரம் ஒதுக்கியுள்ளார்.
இரவு நேரத்தில் தனது மோட்டார் சைக்கிளில் மகள் அன்வியை முன்னால் அமர வைத்துக் கொண்டு, சென்னையில் அவர் ஜாலியாகப் பயணம் செய்துள்ளார்.
தந்தை மற்றும் மகள் இருவருமே ஹெல்மெட் அணிந்து பாதுகாப்பாகப் பயணித்த இந்த நள்ளிரவுப் பயணத்தின் போது, தந்தை ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து அன்வி மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். சில குறும்புகள் செய்தபடி குதூகலத்துடன் தந்தை மற்றும் மகள் சென்றுள்ளனர்.
இந்தக் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியான சில நிமிடங்களிலேயே வைரலானது. "வாழ்க்கையில் கணவன்-மனைவியாகப் பிரிந்தாலும், ஒரு குழந்தைக்கு நல்ல பெற்றோராக எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி ஜோடி ஒரு மிகச்சிறந்த உதாரணம்" என நெட்டிசன்களும் ரசிகர்களும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
சினிமாவில் எவ்வளவு பெரிய உயரங்களை எட்டினாலும், தன் மகளுக்காக நேரம் ஒதுக்கி அவளை ஒரு சாதாரண தந்தையாக அரவணைக்கும் ஜி.வி.பிரகாஷின் இந்த குணம் பலரையும் கவர்ந்துள்ளது.