பாரத ரத்னா எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கை படமாகிறது - முதல் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார் கமல்ஹாசன்!

எம்.எஸ். அம்மாவாக நடிக்க தேர்ந்தெடுத்ததற்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன் - 100% உழைப்பேன் - கண்ணீருடன் ராஷ்மிகா!
Kamal Haasan - Rashmika Mandanna
Published on
Summary

இந்திய இசை உலகின் மாபெரும் ஆளுமையான பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள மியூசிக் அகாடமியில் நடைபெற்ற இதன் பிரம்மாண்டத் தொடக்க விழாவில், உலகநாயகன் கமல்ஹாசன் கலந்துகொண்டு படத்தின் முதல் காட்சிக்கான கைதட்டலை அடித்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார்.

இப்படத்தில் எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மாவின் கதாபாத்திரத்தில் முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

கமல்ஹாசன் பேச்சு

விழாவில் பேசிய கமல்ஹாசன், இந்த பாத்திரத்தில் நடிப்பது ராஷ்மிகாவுக்கு எவ்வளவு பெரிய சவால் என்பதை உலகப் புகழ்பெற்ற மைக்கேல் ஜாக்சனுடன் ஒப்பிட்டுப் பேசினார்.

"மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கும் ஒரு நடிகருக்கு எந்த அளவுக்கு பதற்றமும் அழுத்தமும் இருக்குமோ, அதே போன்ற ஒரு பதற்றம் உங்களுக்கும் இருக்கும் என்பது எனக்குத் தெரியும்.

ஆனால், உங்களை வழிநடத்த ஒரு சிறந்த குழு இருக்கிறது, அவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்."

மேலும், தன் வழக்கமான நகைச்சுவை பாணியில் பேசிய அவர், "என்னால் கூட இந்த பாத்திரத்தை செய்திருக்க முடியாது, என் தாடியை எடுத்தால் கூட இந்த பாத்திரத்தில் என்னால் நடிக்க இயலாது.

நான் எத்தனை வேடங்கள் வேண்டுமானாலும் போடலாம், ஆனால் எம்.எஸ். அம்மா அவர்களின் கண்களில் இருக்கும் அந்தப் பேரன்பையும் கருணையையும் உங்கள் கண்களில் கொண்டு வந்துவிட்டால், நீங்கள் பாதியைக் கடந்துவிட்டீர்கள் என்று அர்த்தம். துணிச்சலோடு இதைச் செய்யுங்கள்" என்று ராஷ்மிகாவுக்கு தைரியம் ஊட்டினார்.

அகில இந்திய சூப்பர் ஸ்டார் 'எம்.எஸ். அம்மா' - கமல்

எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் கலைப் பயணம் குறித்துப் பேசிய கமல், "சினிமாவோ அல்லது அரசியலோ நாட்டை இணைப்பதற்கு முன்பே, தனது இசையால் ஒட்டுமொத்த இந்தியாவையும் ஒன்றிணைத்த ஒரு கலாச்சார சக்தி அவர்.

இந்தியாவின், குறிப்பாக தென்னிந்தியாவின் மிக முக்கிய அடையாளமாகத் திகழ்ந்த அவர், அந்த காலத்திலேயே சமஸ்கிருதம், இந்தி எனப் பல மொழிகளில் பாடிய ஒரு அகில இந்திய சூப்பர் ஸ்டார்" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

கண்ணீருடன் வாக்குறுதி அளித்த ராஷ்மிகா மந்தனா

விழா மேடையில் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய நடிகை ராஷ்மிகா மந்தனா பேசினார்.

"இப்போது என் இதயத்தில் இருக்கும் ஒரே உணர்வு நன்றியுணர்வு மட்டும்தான். எம்.எஸ். அம்மா அவர்களின் குரலில் ஒரு தனித்துவமான தெய்வீக சக்தி இருக்கிறது. அதைக் கேட்கும்போது கடவுளின் முன்னிலையில் அமர்ந்திருப்பது போன்ற உணர்வு ஏற்படும்.

அம்மா, உங்களது வாழ்வின் ஒரு சிறிய பகுதியாக இருக்க என்னை தேர்ந்தெடுத்ததற்கு நான் எப்போதும் கடமைப்பட்டிருக்கிறேன்.

எனது நூறு சதவீத உழைப்பையும், சிறந்த நடிப்பையும் இதற்கு வழங்குவேன் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்." என்று ஆனந்த கண்ணீருடன் பேசினார்.

யார் இந்த எம்.எஸ். சுப்புலட்சுமி?

மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி இந்தியாவின் மிகச்சிறந்த கர்நாடக இசைப் பாடகராகப் போற்றப்படுபவர்.

1998-ல் இந்தியாவின் மிக உயரிய விருதான 'பாரத ரத்னா' விருதைப் பெற்ற முதல் இசைக்கலைஞர் இவரே ஆவார்.

1966-ல் ஐநா பொதுச்சபையில் பாடிய முதல் இந்திய இசைக்கலைஞர் என்ற பெருமைக்குரியவர்.

இமாலயப் புகழ்பெற்ற பஜ கோவிந்தம், குறை ஒன்றும் இல்லை, வெங்கடேச சுப்ரபாதம் ஆகியவை இவரின் குரலால் உலகளவில் இன்றும் ஒலிக்கின்றன.

இவருக்கு ராமன் மக்சேசே விருது (1974), சங்கீத கலாநிதி (1968), பத்ம விபூஷண் (1975) போன்ற எண்ணற்ற விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

தனது 10 வயதில் முதல் இசைப்பதிவைத் தொடங்கி, 1997 வரை சுமார் 7 தசாப்தங்களாக இசை உலகில் ராணியாகத் திகழ்ந்தவர். இவர் தனது 88-வது வயதில் (2004-ல்) சென்னையில் மறைந்தார்.

திரைபடக்குழு

'ஜெர்சி' திரைப்படப் புகழ் கௌதம் தின்னனூரி இப்படத்தை இயக்குகிறார். ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

கீதா ஆர்ட்ஸ் சார்பில் அல்லு அரவிந்த், ராக்லைன் என்டர்டெய்ன்மெண்ட்ஸ் சார்பில் ராக்லைன் வெங்கடேஷ் மற்றும் பிவி ஒர்க்ஸ் சார்பில் பன்னி வாசு ஆகியோர் இணைந்து மிக பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றனர்.

எம்.எஸ். சுப்புலட்சுமியின் 110-வது பிறந்தநாளை முன்னிட்டு இந்தத் தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் பங்கேற்றவர்கள் 'எம்.எஸ். புளூ' வண்ண ஆடையை அணிந்து வந்திருந்தனர்.

மேலும், 'இந்தியன் கோரல் என்செம்பிள்' குழுவினரின் நேரடி இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இப்படம் பான்-இந்தியா திரைப்படமாகப் பல மொழிகளில் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com