

பெண்கள் நினைத்தால் தான் கூட்டுக்குடும்பம். அவர்கள் நினைக்கவில்லை என்றால் கூடாத குடும்பம். எங்கள் வீட்டில் உள்ள பெண்களை சாமியாக பார்க்கிறேன் என்றார்.
மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள படம் மண்டாடி. மீனவர்களின் வாழ்க்கையும் படகு போட்டியையும் மையமாக கொண்டு படம் உருவாகியுள்ளது. படத்தில் சத்யராஜ், மகிமா நம்பியார், சுகாஸ், மிதூன் ஜெய்சங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். எல்ரெட் குமார் தயாரித்துள்ள இந்த படம் வருகிற 10-ந் தேதி திரைக்கு வருகிறது.
இதையொட்டி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.
விழாவில் இயக்குனர் வெற்றிமாறன், ஆர்.ஜே.பாலாஜி, ரவிக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர். விழாவில் சூரி பேசியதாவது:-
எனக்கு கிடைத்த கைத்தட்டல் அனைத்தையும் அப்படியே வெற்றிமாறனிடம் கொடுத்து விடுகிறேன். மண்டாடி படத்தின் தலைப்பை மக்களிடையே கொண்டு செல்ல கஷ்டப்பட்டோம். ஆனால் இப்போது உலகம் முழுவதும் கொண்டு சென்று விட்டோம். படத்தின் கதையை கேட்டதும் என் கதாபாத்திரம்தான் என் வயது என சொல்லி படத்திற்குள் வந்தார் மகிமா நம்பியார். படப்பிடிப்பின் போது அவருக்கு சிறிய காயமும் ஏற்பட்டது.
அதை பொருட்படுத்தாமல் படப்பிடிப்பிற்கு வந்தார். நான் இந்தளவுக்கு வந்திருக்கிறேன் என்றால் என் குடும்பம்தான் காரணம். அவர்களின் ஆதரவு இல்லை என்றால் நான் இங்கு வந்திருக்க முடியாது.
பெண்கள் நினைத்தால் தான் கூட்டுக்குடும்பம். அவர்கள் நினைக்கவில்லை என்றால் கூடாத குடும்பம். எங்கள் வீட்டில் உள்ள பெண்களை சாமியாக பார்க்கிறேன்.
எல்லாத்துக்கும் காரணம் என் அம்மாதான். அவர்தான் என் சாமி. விழாவுக்கு வரும் போது என் அம்மா என் மகளிடம், ஒரு காலத்தில் அம்மா பசிக்குது ஒரு 300 ரூபாய் போட்டு விடு என்று அழுவான். ஆனால் இன்னைக்கு அவனுக்காக இவ்வளவு பேர் போஸ்டர் அடித்து ஒட்டி இருக்கிறார்கள். வாழ்க்கையை கற்றுக்கொடுத்தது என் அம்மா. மண்டாடி படம் சிறப்பாக வந்துள்ளது. அனைவரும் திரையரங்குகளுக்கு சென்று பாருங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
சூரியின் தாயார் பேசும் போது, “ஒருநாள் என் மகன் சூரி எனக்கு போன் செய்தான். அவனிடம் சாப்பிட்டாயா என கேட்டேன். இல்லை. குழாயில் தண்ணீரை திறந்து குடித்து விட்டு அப்படியே படுத்துவிட்டேன் என சொன்னான். ஆனால் இப்போது அவனை பார்க்கும் போது ரொம்ப மகிழ்ச்சி” என கண்ணீர் மல்க கூறினார்.