தந்தையின் இறுதிச் சடங்குக்கு அரசு மரியாதை: இதயம் கூப்பிய நன்றி அண்ணா... சாந்தனு

பெயருக்கு ஏற்ற கம்பீரமான மரியாதையை என் தந்தைக்கு நீங்கள் தந்ததை என் இறுதிக்குள்ளும் நன்றியோடு நினைத்துக் கொள்வேன்.
தந்தையின் இறுதிச் சடங்குக்கு அரசு மரியாதை: இதயம் கூப்பிய நன்றி அண்ணா... சாந்தனு
Published on

இயக்குனர் - நடிகர் பாக்யராஜ் சமீபத்தில் மறைந்தார். அவரது உடல் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என்று முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டார். அதன்படி 72 குண்டுகள் முழங்க பாக்யராஜ் உடல் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இதையொட்டி முதலமைச்சர் விஜய்க்கு பாக்கியராஜ் மகனும் நடிகருமான சாந்தனு நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:-

உங்களுக்கான என் நன்றியை 26 அல்லது 247-க்குள் எப்படி அடக்கிவிட முடியும்?

மெய்யாகவே என் உயிர் வரை நீடிக்கும் நன்றியிது. என் திருமணத்திற்கு தாலி எடுத்து தந்து என் மகிழ்ச்சித் திருநாளைத் தொடக்கி வைத்தீர்கள். அதற்கே நான் இன்னும் நன்றி சொல்லித் தீரவில்லை.

அதற்குள் என் வாழ்வின் துரதிருஷ்ட துக்க தினமான என் தந்தையின் மறைவிற்கு ஆறுதல் சொல்ல வந்த நீங்கள், பதவி சார்ந்த அந்தஸ்தை ஒதுக்கிவிட்டு, பதவிசாக மண்டியிட்டு அம்மாவிடம் ஆறுதல் சொன்னதில் நான் நெகிழ்ந்து விட்டேன்.

அரசு மரியாதை. மரணத்திலும் மரியாதை ஒரு கலைஞனுக்கான இமாலய பாக்கியம். பெயருக்கு ஏற்ற கம்பீரமான மரியாதையை என் தந்தைக்கு நீங்கள் தந்ததை என் இறுதிக்குள்ளும் நன்றியோடு நினைத்துக் கொள்வேன்.

இப்போதைக்கு வேறென்ன சொல்ல?

இதயம் கூப்பிய நன்றி அண்ணா.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com