

விழிப்புடன் செயல்பட வேண்டிய வாரம். ராசி அதிபதி புதன் உச்சம் பெறுகிறார் இதற்கு சனி மற்றும் செவ்வாய் பார்வை உள்ளது. இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரம் சற்று சுமாராக உள்ளதால் திட்டமிட்டு செயல்படுவது அவசியம். எனினும் லாப ஸ்தானத்தில் குரு பகவான் சஞ்சரிப்பதால் மலை போல் வந்த துயரம் பனி போல விலகும். சுய உழைப்பினால் வெற்றியை தக்க வைத்துக் கொள்வீர்கள். வருமானம் உயர்வதால் வீட்டிலும் வெளியிலும் செல்வாக்கு உயரும். பெற்றோர்கள் பெரியோர்கள் முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். உபரி லாபத்தை அரசு நிதி நிறுவனங்களில் சேமிப்பது முக்கியம். அல்லது வீடு வாகனம் என சுப விரயமாக மாற்றுவது உங்கள் கையில் உள்ளது. சந்தோஷத்தில் கிடைக்கும் அனுபவத்தை விட துயரத்தில் கிடைக்கும் அனுபவத்திற்கு பலம் அதிகம். தேவையற்ற வார்த்தைகளை வாக்குவாதங்களை குறைத்தால் குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு உரிய வைத்தியம் கிடைக்கும். மனதிற்குப் பிடித்த நல்ல வரன் அமையும். சிலருக்கு புதிய தொழில் துவங்கும் எண்ணம் உருவாகும். ஸ்ரீரங்கம் சென்று வர லட்சுமி கடாட்சம் அதிகமாகும்.