

ஆதாயமான வாரம். பாக்கியாதிபதி சூரியன் தனது சமசப்தம பார்வையால் ராசியை பார்க்கிறார். ஆன்ம பலம் பெருகும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பிள்ளைகளின் சுப நிகழ்விற்கு எதிர்பார்த்த தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். கணவன், மனைவியிடம் இருந்து வந்த பிரச்சினைகள் குறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். தன்னம்பிக்கை தைரியம் கூடும். திடீர் யோகத்தால் எதிர்பாராத நல்ல நிகழ்வுகள் நடைபெறும். சிறிய உழைப்பு பெரிய லாபத்தை ஈட்டித்தரும். தொழிலில் கூட்டாளிகளால் சாதகமான சூழல் ஏற்பட்டு தனலாபம் அடைவீர்கள். வெளிநாட்டு வேலை முயற்சி கைகூடும். தாயிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் குறையும். உயர் கல்வியில் தேர்ச்சி ஏற்பட கடின உழைப்பு தேவை.வீடு, வாகனம் போன்ற சுப விரயங்கள் ஏற்படும். திருமணத்தடை அகலும். குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் கடன் வாங்கவும் கூடாது கடன் கொடுக்கவும் கூடாது. கொடுத்த பணம் திரும்பி வராது போகுதல் போன்ற பிரச்சனை இருக்கும். பௌர்ணமி அன்று விரதம் இருந்து திருச்செந்தூர் முருகனை வழிபடவும்.