உலக அளவில் ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் எழுச்சியால் நன்மைகள் இருந்தபோதும் தீமைகளும் இருக்கின்றன.
அதில் ஒன்று போலி செய்திகள். போலி புகைப்படங்கள், வீடியோக்கள். உண்மைக்கும் பொய்க்கும் இடைலையான கோடு இந்த ஏஐ யுகத்தில் காணாமல் போயுள்ளது.
அந்த வகையில் அமெரிக்காவில் ஜெசிகா பாஸ்டர் என்ற ஒரு பெண் வைரலாகி வருகிறார். ராணுவ அதிகாரியாக சித்தரிக்கப்படும் இந்த பெண் அதிபர் டிரம்ப் மற்றும் உலகத் தலைவர்களுடன் இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் வைரலாகின.
டிரம்ப் உடன் நடப்பது போலவும், ரஷிய அதிபர் புதினுடன் செல்ஃபி எடுப்பது போலவும், மெலனியா ட்ரம்ப் மற்றும் ஜெலென்ஸ்கியை சந்திப்பது போலவும் புகைப்படங்கள் உலா வருகின்றன.
மேலும் ஈரான் போர் உள்ளிட்ட டிரம்ப் உடைய ராணுவ முடிவுகளை ஆதரிக்கும் வகையில் இந்த 'ராணுவ வீராங்கனை' சித்தரிக்கப்படுகிறார்.
ஹார்முஸ் ஜலசந்தியில் ஒரு போர்க்கப்பலில் ஹை ஹீல்ஸ் அணிந்து ஜெசிகா பாஸ்டர் நடப்பது போன்ற புகைப்படங்களும் இதில் அடங்கும்.
டிரம்ப்பின் தீவிர பற்றலாளர்களான "Make America Great Again" (MAGA) இயக்க ஆதரவாளர்கள் மற்றும் முதியவர்கள் பலரும் இவற்றுக்கு லைக்குகளை குவித்து பகிரவும் செய்கின்றனர்.
"அழகான வீராங்கனை", "உண்மையான தேசபக்தி" எனப் பாராட்டி கருத்துக்களை பதிவிடுகின்றனர்.
வெறும் 4 மாதங்களில் ஜெசிகா பாஸ்டர் இன்ஸ்டாகிராம் கணக்கு 10 லட்சம் பாலோயர்களை பெற்றது.
ஆனால் வாஷிங்டன் போஸ்ட் நடத்திய விசாரணையில், அமெரிக்க ராணுவத்தில் இந்தப் பெயரில் யாரும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
இந்தப் புகைப்படங்கள் அனைத்தும் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டவை என்பது நிபுணர்களால் கண்டறியப்பட்டது.
ஜெசிகா பாஸ்டர் கணக்கு முடக்கப்பட்டாலும், அதே போன்ற புகைப்படங்களுடன் பல புதிய போலி கணக்குகள் சமூக வலைதளங்களில் மீண்டும் உருவாகி வருகின்றன.
முன்னாள் அமெரிக்கக் காங்கிரஸ் உறுப்பினர் ஆடம் கின்சிங்கர், "ஏஐ-யை கண்டு இவ்வளவு பேர் ஏமாறுவது பைத்தியக்காரத்தனமானது" என்று தனது எக்ஸ் தளத்தில் சாடியுள்ளார்.
ஈரான் போர், வரி விவகாரம், குடியேற்ற விவகாரம் என டிரம்ப் உடைய ஆட்சி மீது அமெரிக்காவில் அதிருப்தி நிலவுவதாக அண்மையில் வெளியான கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன.
இந்த சூழலில் டிரம்ப் உடைய முடிவுகளை நியாயப்படுத்தவும் ஒரு குறிப்பிட்ட அரசியல் சித்தாந்தத்தை திணிக்கமும் இத்தகு போலி பிம்பங்கள் உருவாக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஏஐ மூலம் உருவாக்கப்படும் இத்தகு போலி பிம்பங்கள் அமெரிக்காவை தாண்டி வரும் காலங்களில் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் அரசியல் ரீதியாகவும் பெரும் தாக்கத்தை செலுத்தும் என்று கணிக்கப்படுகிறது.