வழிபாடு

2026 வார ராசிபலன்- மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்

பூர்வீகச் சொத்து தொடர்பாக உடன் பிறந்தவர்களால் ஏற்பட்ட மனக் கவலை மறையும்.

மாலை மலர்

மேஷம்

பொருளாதார மேன்மை உண்டாகும் வாரம். ராசியில் தனாதிபதி சுக்கிரன் சஞ்சாரம் செய்கிறார். தடைபட்ட வாடகை வருமானம், சம்பள பாக்கிகள் வராக்கடன்கள் வசூலாகும். உழைக்கும் எண்ணம் அதிகரிக்கும். தொழிலில் நல்ல லாபம் உண்டாகும். இதுவரை பொருளாதார சிக்கல்களில் இருந்த பின்னடைவுகள் நீங்கி நன்மைகள் ஆரம்பிக்கும். சிறு தொழில் மற்றும் சாலையோர வியாபாரிகளுக்கு தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். வாக்கால் தொழில் நடத்தும் வழக்கறிஞர்கள், பேச்சாளர்கள், விற்பனை பிரதிநிதிகள், ஜோதிடர்களுக்கு வருமானம் இரட்டிப்பாகும்.

பூர்வீகச் சொத்து தொடர்பாக உடன் பிறந்தவர்களால் ஏற்பட்ட மனக் கவலை மறையும். கேட்ட இடத்தில் கேட்டவுடன் கடன் கிடைக்கும். அப்பார்ட்மெண்ட் வீடு அல்லது பிளாட் வாங்க ஏற்ற காலம். சிலருக்கு மருமகன், மருமகள் வரும் வாய்ப்புள்ளது. பங்காளிகளால் ஏற்பட்ட பாகப் பிரிவினை வருத்தங்கள் நீங்கும். நீங்கள் எதிர்பார்த்த அளவு பங்கு கிடைக்காவிட்டாலும் சுமூகமாக நல்ல முறையில் சொத்து கிடைக்கும். முருகன் வழிபாட்டால் வெற்றியை அதிகரிக்க முடியும்.

ரிஷபம்

நிதானமாக செயல்பட வேண்டிய வாரம். ராசிக்கு சனியின் 3ம் பார்வையும் செவ்வாயின் நான்காம் பார்வையும் உள்ளது. ராசிக்கு செவ்வாய், சனி பார்வை இருப்பதால் வேலைப்பளு மிகுதியாகும். உழைத்த கூலி கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். மறைமுக எதிரிகள் உருவாகலாம். நம்பியவர்களே உங்களுக்கு எதிராக திரும்பும் வாய்ப்பு இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும். பங்கு வர்த்தகம் மற்றும் மறைமுக பணப் பரிமாற்றத்தில் கவனம் தேவை.

அண்டை அயலாருடன் சிறு சிறு மன வருத்தம் உண்டாகும். தேவையற்ற பேச்சையும், வாக்குக் கொடுப்பதையும் தவிர்ப்பது நல்லது. சிலர் புதிய தொழில் அல்லது வேலைக்காக பூர்வீகத்தை விட்டு வெளியேறுவார்கள். திருமண முயற்சி ஓரிரு வாரங்களுக்குப் பிறகு சாதகமாகும்.சிலருக்கு கட்டிய வீடோ, காலிமனையோ வாங்குவதற்கு இப்போது சந்தர்ப்பம் அமையும், மகாலட்சுமி வழிபாடு மகத்தான முன்னேற்றம் தரும்.

மிதுனம்

வாழ்க்கைத் தரம் உயரும் வாரம். ராசி அதிபதி புதனுக்கு குருவின் ஒன்பதாம் பார்வை உள்ளது. நடக்குமா? நடக்காதா என கேள்விக்குறியாக இருந்த அனைத்து நிகழ்வுகளும் மனதிற்கு இனிய முறையில் திருப்பு முனையாக மாறும். சிலர் அரசு வேலை கிடைக்கப் பெறுவீர்கள். சிலருக்கு வெளியூர், வெளிநாட்டில் வேலை கிடைக்கும். வேலை தொழில் போட்டிகளையும், சிக்கல்களையும் அனுபவித்தவர்களுக்கு நிலைமை சாதகமாக மாறும்.

உங்களின் அனைத்துப் பிரச்சினைகளும் நல்ல படியாக முடிவுக்கு வரப்போகிறது. நம்பிக்கை, நாணயத்தை நிலை நிறுத்துவீர்கள். தொழிலுக்கு அரசின் உதவி கிடைக்கும். உங்களின் முயற்சிக்கு குடும்ப உறுப்பினர்கள் பக்க பலமாக இருப்பார்கள். குல இஷ்ட தெய்வ பிரார்த்தனைகள் நிறைவேறும் இளம் பருவத்தினருக்கு திருமண காலம் நெருங்கி விட்டது. தம்பதிகளிடம் ஒற்றுமை மேலோங்கும். மகாவிஷ்ணு வழிபாடு மனதில் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

கடகம்

விரயத்தை கட்டுப்படுத்த வேண்டிய வாரம். 6,8,12 எனும் மறைவு ஸ்தானங்களுக்கு குருவின் சம்பந்தம் உள்ளது. சிலருக்கு வீடுமாற்றம், தொழில் இடமாற்றம் போன்றவைகள் நடக்கும். அனைத்து மாற்றங்களும் உங்களின் எதிர்காலத்திற்கு நல்லதாகவே அமையும். சிலர் வயது மூப்பு மற்றும் சோர்வால் வாரிசுகளிடம் தொழில் பொறுப்பை ஒப்படைத்து விட்டு ஓய்வு எடுக்க விரும்பலாம். திருமணத்தடை அகலும். சிலருக்கு மறுமண யோகம் உண்டாகும். பணப்புழக்கம் சற்று குறைவது போல் தோன்றினாலும் உடனிருப்பவர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள்.

வேலை பார்க்கும் இடத்தில் நிலவிய மனக்கசப்புகள் விலகும். கடல் கடந்த வேலை செய்யும் யோகம் உண்டாகும். நண்பர்கள், உடன் பிறந்தோர் நட்பும், நல்லுறவும் ஏற்படும். குடும்பத்தில் சுபமங்கள விரயச் செலவு உண்டாகும். சுப கடன் வாங்கி பூமி, வீடு, வாகன, வசதியை பெருக்குவீர்கள். கண், காது, மூக்கு தொடர்பான உபாதைகள் வைத்தியத்தில் சீராகும். உயர் கல்வியில் மேன்மை உண்டாகும். கல்லூரி அரியர்ஸ் பாடத்தை எழுதி முடிக்க ஏற்ற காலம். அம்பிகை வழிபாட்டால் ஆனந்தம் கூடும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406